84 ரன்களில் சுருண்ட கேகேஆர்
ஐபிஎல்லின் 39வது போட்டி நேற்றைய தினம் அபுதாபியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் அவர்களின் நேற்றைய போட்டி அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்த நிலையில் வெறும் 84 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது.
8 ரன்களில் 3 விக்கெட்டுகள்
ஆர்சிபியில் ஷாபாஸ் அகமதுவிற்கு பதிலாக நேற்றைய போட்டியில் களமிறங்கிய முகமது சிராஜ் தன்னுடைய அதிரடியை நேற்றைய போட்டியில் காட்டினார். அடுத்தடுத்து அவர் வீசிய பந்துகளை சமாளிக்க முடியாமல் தடுமாறியது கேகேஆர். 4 ஓவர்களில் 8 ரன்களை மட்டுமே கொடுத்து அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சிராஜின் 2 மேட்-இன் ஓவர்கள்
ஆரம்பத்திலேயே அவர் தனது விக்கெட் வேட்டையை துவங்கிய நிலையில் கேகேஆர் நிலை குலைந்தது. மேலும் இதுவரை ஐபிஎல்லில் இல்லாத சாதனையாக சிராஜ் 2 மேட்-இன் ஓவர்களையும் போட்டார். நேற்றைய தினம் அவருக்கானதாக இருந்தது. இதையடுத்து ஆட்ட நாயகன் விருதையும் அவர் தட்டி சென்றார்.
இறுதிகட்ட முடிவு -கோலி
இந்நிலையில், முதலில் அவருக்கு பௌலிங்கை கொடுக்கும் ஐடியா இல்லை என்றும் வாஷிங்டன் மற்றும் மோரீசுக்கு கொடுக்கவே முடிவு செய்திருந்ததாக ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். வெற்றியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பின்னர் சிராஜ் மற்றும் மோரீசுக்கு பௌலிங்கை மாற்றி கொடுத்ததாக குறிப்பிட்டார்.
பலன் கிடைத்துள்ளது -விராட்
கடந்த ஆண்டு சிராஜ்க்கு சிறப்பான ஆண்டாக அமையவில்லை என்றும் இந்த சீசனில் அவர் நெட் பிராக்டீசின் போது சிறப்பாக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய கடுமையான உழைப்புக்கு தற்போது பலன் கிடைத்துள்ளதாகவும் இதை அவர் தொடர்வார் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிராஜ் நன்றி
இதனிடையே, தனக்கு ஓபனிங் பௌலிங் அளிக்கப்படும் என்று தான் நினைக்கவில்லை என்றும், ஆனால் தயாராக இருக்கும்படி விராட் கூறியதாகவும் தெரிவித்துள்ள சிராஜ், தன்மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை அளித்த விராட்டிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.