கேப்டன் பதவி குறித்து கோலி
இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் விராட் கோலி, அணியின் பல்வேறு வெற்றிகளுக்கு காரணமாக உள்ளார். சர்வதேச அளவில் அனைவரது கவனத்தையும் இந்திய அணி பெற்றுள்ளது. இதை சாத்தியமாக்கியுள்ளார் விராட் கோலி. இந்நிலையில் ரவிசந்திரன் அஸ்வினுடன் கோலி மேற்கொண்ட இன்ஸ்டாகிராம் நேரலையில் தன்னுடைய கேப்டன் பதவி, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கோலி மனம் திறந்தார்.
எம்எஸ் தோனியின் பங்கு அதிகம்
இந்திய அணியின் கேப்டனாக தான் ஆனதில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் பங்கு மிகவும் அதிகம் என்று கோலி குறிப்பிட்டுள்ளார். தன்னை நீண்ட காலம் தோனி தீவிரமாக கண்காணித்ததாகவும் தான் கேப்டன் ஆனதில் இந்த விஷயம் மிகப்பெரிய பங்கை வகித்ததாகவும் கோலி கூறியுள்ளார். தனக்கு பிறகு கேப்டன் பதவியில் தான் சிறப்பாக செயல்படுவேன் என்று எம்எஸ் தோனி நம்பியதாகவும் கோலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விராட் கோலி உறுதி
தனக்கு கேப்டனாகும் கனவு எப்போதும் இருந்ததில்லை என்றும் ஆனால் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள தனக்கு எப்போதும் ஆர்வம் அதிகமாக இருந்ததாகவும் கோலி தெரிவித்துள்ளார். பல்வேறு விஷயங்கள் குறித்து தோனியிடம் தான் ஆலோசனை மேற்கொள்வேன் என்றும் அந்த கலந்துரையாடல் தோனிக்கு தன்மீது நம்பிக்கை வருவதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கோலி மேலும் கூறினார்.
நம்பிக்கையை ஏற்படுத்துவது அவசியம்
கேப்டன் பொறுப்பு என்பது ஒரே நாளில் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கைமாறி விடாது என்றும் நாம் நம்பிக்கையை ஏற்படுத்துவது அவசியம் என்றும் கோலி தெரிவித்துள்ளார். மேலும் அந்த பொறுப்பிற்கு தான் தகுதியானவர் என்று நிரூபிக்க வேண்டும் என்றும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தில் தன்னை தொடர்ந்து கண்காணித்து அந்த பொறுப்பை தான் பெறுவதில் தோனி முக்கிய பங்காற்றியதாகவும் கோலி கூறியுள்ளார்.