பிர்மிங்காம் : இந்திய அணியின் தோல்வி குறித்து விராட் கோஹ்லி பேசியிருக்கிறார். அப்போது, இறுதி நிலை பேட்ஸ்மேன்களான இஷாந்த் மற்றும் உமேஷ் முதல் இன்னிங்க்ஸில் சிறப்பாக களத்தில் தாக்குப்பிடித்து, தான் ரன் குவிக்க ஒத்துழைப்பு கொடுத்ததை குறிப்பிட்டார். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என கூறினார்.
அவர் இஷாந்த் மற்றும் உமேஷிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மறைமுகமாக இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு சொல்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இங்கிலாந்து அணி தனது ஆயிரமாவது டெஸ்ட் போட்டியில் வென்று, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக தொடங்கி உள்ளது. வெற்றி பெற 32 ரன்கள் இருந்த நிலையில் தோல்வி அடைந்த இந்திய அணி, தோல்விக்கான காரணங்களையும், அடுத்த போட்டியில் வெல்வதற்கான வழிகளையும் யோசித்துக் கொண்டு இருக்கிறது.
இதனிடையே, விராட் கோஹ்லி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "எங்களுடைய ஷாட் தேர்வு இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும். ஆனால், இங்கிலாந்து அருமையாக மீண்டு வந்தது. இந்த போட்டியில் இருந்து நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, நாங்கள் முன்னேற வேண்டும்" என்றார்.
மேலும், "இங்கிலாந்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நாங்கள் ஆட்டத்தை தொடங்கிய விதம் பற்றி ஒரு அணியாக நாங்கள் பெருமை கொள்கிறோம். முதல் இன்னிங்க்ஸில் இறுதி நிலை பேட்ஸ்மேன்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறது. இஷாந்த் சர்மாவும், உமேஷ் யாதவும் நீண்ட நேரம் களத்தில் தாக்குப்பிடித்தார்கள்" என கூறினார் கோஹ்லி.
இங்கிலாந்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்த சாம் குர்ரனுடைய பேட்டிங் குறித்து பேசிய கோஹ்லி, "சாம் குர்ரனிடம் நிறைய திறமைகள் உள்ளன. அவர் பேட்டிங் செய்த போது எந்த அழுத்தத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை. அவர் எங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்று கூட விரும்புகிறோம்" என்றார்.
இங்கிலாந்து - இந்தியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில், வரும் ஆகஸ்ட் 9 தொடங்க உள்ளது.