மும்பை: ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரில் இந்திய வீரர் விராட் கோலி வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
டி20 உலகக்கோப்பை நெருங்கிவிட்ட சமயத்தில் இந்திய அணியின் இந்த தரமான கம்பேக் ரசிகர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக விராட் கோலி நங்கூரம் போன்று நிலைத்து நின்றது தான் பெரிய நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பையில் கம்பேக் தந்த கோலி ஆஸ்திரேலிய தொடரில் முதல் 2 போட்டிகளில் சொதப்பினார். எனினும் 3வது டி20ல் 48 பந்துகளில் 69 ரன்களை விளாசி, தூண் போல நின்று இந்திய அணியை காப்பாற்றினார்.
இந்நிலையில் இந்த அரைசதம் மூலம் பிரமாண்ட சாதனையை கோலி படைத்துள்ளார். அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் சார்பில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் ராகுல் டிராவிட்டை முந்தி 2வது இடத்தை பிடித்துள்ளார். டிராவிட் 504 போட்டிகளில் விளையாடி 24,000 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார். விராட் கோலி தற்போது 471 போட்டிகளில் விளையாடி 24,078 ரன்களை சேர்த்துள்ளார்.
மன்கட் சர்ச்சையில் புதிய திருப்பம்.. இந்திய வீராங்கனை தீப்தி சர்மா பரபர தகவல்.. உண்மை இதுதான்!
இந்த பட்டியலில் ஏற்கனவே சவுரவ் கங்குலி, தோனி, விரேந்திர சேவாக் ஆகியோரை முந்தியிருந்த விராட் கோலி தற்போது டிராவிட்டையும் முந்திவிட்டதால், 2வது இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் 664 போட்டிகளில் 34,357 ரன்களை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.