ராகுல் அவுட்
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. வழக்கம் போல் முக்கிய ஆட்டத்தில் கேஎல் ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்களில் வெளியேற, இந்திய அணி 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறியது. அப்போது களத்தில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்து அதிரடியை காட்டியது.
கோலி அதிரடி
விராட் கோலி கவுண்டர் அட்டாக் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து அதிரடியான ஷாட்களை ஆடினார். குறிப்பாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் மிரட்டும் வேகத்தில் பந்துகளை சரியான லைன் மற்றும் வேங்தில் வீசினர்.ஆனால் விராட் கோலி அதனை சாதூர்யமாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார்.
கோலி சிக்சர்
குறிப்பாக ஹேசல்வுட் வீசிய பந்தை பளார் என்று மிட் விக்கெட் திசையில் விராட் கோலி சிக்சருக்கு பறக்கவிட்டார். இதே போன்று கடந்த டி20 போட்டியில் இந்திய விக்கெட்டுகளை வீழ்த்திய ஆடம் சாம்பா, ஓவரிலும் கோலி அதிரடியை காட்டினார். இறங்கி வந்த பந்தை நேராக சிக்சருக்கு விராட் கோலி அடித்தார்.
3 ஆண்டுகளுக்கு முன்
கோலிக்கு நிகராக மறுமுனையில் சூர்யகுமார் யாதவும் அதிரடியை காட்ட, இந்திய அணியில் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. விராட் கோலிக்கு ஐதராபாத் மிகவும் பிடித்த மைதானமாகும். கடந்த முறை டி20 போட்டியில் விளையாடிய போது விராட் கோலி 93 ரன்களை இங்கு விளாசினார். 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதே போன்ற ஆட்டத்தை கோலி வெளிப்படுத்துகிறார்.