முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின், முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி தான் டாஸ் போடப்பட்டு இப்போட்டி தொடங்கப்பட்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
32 ரன்கள் முன்னிலை
பிறகு, நேற்று நடந்த ஐந்தாவது நாள் ஆட்டத்தில், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கான்வே அதிகபட்சமாக 54 ரன்களும், வில்லியம்சன் 49 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஷமி 4, இஷாந்த் 3, அஷ்வின் 2, ஜடேஜா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம், இந்தியாவை விட அந்த அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றது.
கைவசம் 8 விக்கெட்ஸ்
இதைத் தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், ஷுப்மன் கில் 8 ரன்களிலும், ரோஹித் ஷர்மா 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரையும் டிம் சவுதி அபாரமாக எல்பிடபிள்யூ செய்தார். நேற்றைய 5வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 8 ரன்களுடனும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று (ஜூன்.23) மாற்று நாள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்றும் போட்டி நடைபெற உள்ளது.
கோலி பிளான்
வானிலை தெளிவாக இருப்பதால், இன்றைய ஆட்டம் எந்தவித தடையுமின்றி முழுமையாக நடைபெறும் என்று தெரிகிறது. பெரும்பாலான எக்ஸ்பெர்ட்ஸ் இப்போட்டி டிராவில் முடிவடையும் என்று கூறும் நிலையில், விராட் கோலியின் வியூகம் வேறு மாதிரியாக உள்ளது. அதாவது, இந்தியாவின் கைவசம் 8 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில், அதிரடியாக விளையாடி லன்ச்சுக்கு முன்பாகவே டிக்ளேர் செய்ய வேண்டும் என்று அவர் ஆலோசனை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்மார்ட் வியூகம்
கிட்டத்தட்ட உணவு இடைவேளைக்கு முன்பாக விரைவாக ரன்களை சேர்த்து, 180 - 220 ரன்கள் இலக்காக நியூசிலாந்துக்கு தீர்மானிக்க கோலி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதனால், இந்திய அணியின் லோ ஆர்டர் ஹிட்டர்களான ரிஷப் பண்ட், ஜடேஜா மூலம் ஸ்கோரை விரைவாக அதிகரிக்க வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாம். அதாவது, புஜாரா, ரஹானே தவிர்த்து மீதமுள்ள அனைத்து பேட்ஸ்மேன்களையும் பேட்டை அதிரடியாக சுழற்ற அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. எனினும், ரோஹித் ஷர்மாவும், ரஹானேவும் இந்த ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றும், மேட்சை டிரா செய்யவே முயற்சிக்கலாம் என்று கேப்டன் கோலியிடம் அறிவுறுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.