5ம் தேதி டெஸ்ட் போட்டி துவக்கம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான தொடர்கள் நடைபெறவுள்ள நிலையில் முதலில் துவங்கவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன. இதன் முதல் போட்டி வரும் 5ம் தேதி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பிட்னஸ் பயிற்சியில் கோலி
இதையொட்டி இந்திய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் சென்னையில் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளனர். கேப்டன் விராட் கோலியும் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவர் ஹோட்டல் அறையில் அமைதியாக இருக்கவில்லை. மாறாக அங்குள்ள உபகரணங்களை கொண்டு பிட்னஸ் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
வீடியோ வெளியிட்ட கோலி
தான் பிட்னஸ் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விராட் கோலி, குவாரன்டைன் காலத்திலும் சிறப்பான இசை மற்றும் ஜிம் உபகரணங்கள் மட்டுமே போதுமானது என்றும் நமக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில் எங்கேயும் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் என்றும் கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.
புகைப்படம் வெளியீடு
கோலி மட்டுமின்றி மயங்க் அகர்வாலும் ஹோட்டல் அறையில் தான் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். காயம் காரணமாக கடந்த தொடரில் இடம்பெறாத இஷாந்த் சர்மா மற்றும் அக்ஷர் படேல் ஆகியோரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இந்த தொடரில் இடம்பெற்றுள்ளது அணிக்கு வலிமையை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.