நாடுமுழுவதும் ஊரடங்கு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடுமுழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச அளவில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வீட்டிற்குள்ளேயே அடைபட்டுள்ளனர்.
தொடர் பதிவுகள்
இந்த ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக ஆக்கும் வகையில், சர்வதேச விளையாட்டு வீரர்கள், குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள், குறிப்பாக கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட தளங்களில் பல்வேறு பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இவருடைய மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் தொடர் பதிவுகளை போட்டு வருகிறார்.
கெவின் பீட்டர்சன்னுடன் விவாதம்
இந்நிலையில், இந்த ஓய்வு நேரத்தில் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன்னுடன் இன்ஸ்டாகிராம் மூலம் நேரலையில் இணைந்த விராட் கோலி, ஊரடங்கு, எம்எஸ் தோனி, ஆர்சிபி உள்ளிட்டவை குறித்து மனம் திறந்து பேசினார். இவர்களின் விவாதம் இரண்டு நண்பர்கள் பேசிக் கொள்வது போல இருந்தது. மேலும் ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவர் நேரலை மூலம் பதில்கள் கூறினார்.
கொரோனா கொடுத்த வாய்ப்பு
தான் மற்றும் தன்னுடைய மனைவி இருவரும் நீண்ட காலமாக ஒரே இடத்தில் இருக்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை என்றும் தற்போது கொரோனாவால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், தாங்கள் ஒரே இடத்தில் இருப்பதாகவும், கொரோனாவால் ஏற்பட்டுவரும் பாதிப்பு மனதை பெருமளவில் பாதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரபலப்படுத்திய பிரபலம்
மேலும் தன்னுடைய 'சிக்கு' என்ற செல்லப்பெயர் குறித்தும், தன்னுடைய நினைவலைகளை அவர் பகிர்ந்து கொண்டார். ரஞ்சிக் கோப்பை தொடரில் பயிற்சியாளராக இருக்கும் நபர் ஒருவர் இந்த சிக்கு என்ற பெயரை தனக்கு ஏற்படுத்தியதாகவும், தன்னுடைய கன்னங்கள் உப்பலாக இருப்பதை கொண்டு, கார்ட்டூன் கேரக்டரில் இருந்து இந்த பெயர் கிடைத்ததாகவும், எம்எஸ் தோனி இந்த பெயரை மைதானங்களில் சத்தமாக கூப்பிட்டு பிரபலப்படுத்தியதாகவும் கோலி குறிப்பிட்டுள்ளார்.
விளக்கம் தந்த கோலி
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 முறை இறுதிப்போட்டி வரை வந்தும் கோப்பையை ஒருமுறை கூட வெல்லமுடியாதது குறித்த பீட்டர்சன்னின் கேள்விக்கு பதிலளித்த கோலி, அணியில் மிகச்சிறந்த வீரர்கள் உள்ளதால், நெருக்கடி அதிகமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு ரிலாக்ஸாக விளையாடி கோப்பையை கைப்பற்ற முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.
விளையாடாத ஒரே விளையாட்டு கோல்ப்
மேலும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விராட் கோலி, தாடி இல்லாமல் தன்னுடைய முகம் அழகாக இருக்காது என்பதால், தான் தாடியை எடுக்க மாட்டேன் என்றும், கிரிக்கெட்டில் சிறந்த தருணம், கடந்த 2011ல் இந்தியாவில் உலக கோப்பை வெற்றி என்றும், தான் இதுவரை கோல்ப் விளையாட்டை மட்டுமே விளையாடவில்லை என்றும் கூறினார்.