சொற்ப ரன்கள் வித்தியாசம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் துவங்கி 3வது நாள் ஆட்டம் முடிந்துள்ளது. இன்றைய தினம் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை முடித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியைவிட 33 ரன்களே பின்தங்கியுள்ளது இந்திய அணி.
123 ரன்கள் பார்ட்னர்ஷிப்
இதற்கு முழுமுதல் காரணமாக அமைந்தனர் இந்திய பௌலர்கள் ஷர்துல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர். இருவரும் இன்றைய தினம் பார்ட்னர்ஷிப்பில் 123 ரன்களை குவித்தனர். ஒரு கட்டத்தில்189 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறிய நிலையில் இவர்கள் இருவரும் அதிரடி கிளப்பினர்.
உயர்ந்த இந்திய அணியின் ஸ்கோர்
இருவரும் தங்களது அரைசதத்தின்மூலம் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்சில் பெரிய அளவிலான வித்தியாசம் இரு அணிகளுக்கு இடையில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொற்ப வித்தியாசமே ஏற்பட்டுள்ளது.
கேப்டன் விராட் கோலி வாழ்த்து
இந்நிலையில் இந்த இரு வீரர்களுக்கும் கேப்டன் விராட் கோலி தனது வாழ்த்துக்களை டிவிட்டர் மூலம் பகிர்ந்துள்ளார். இருவரும் சிறப்பாக விளையாடியதாகவும் குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் தனது முதல் டெஸ்ட் போட்டியான இந்த போட்டியில் பொறுமையாக விளையாடியதை சுட்டிக் காட்டினார் கோலி. மேலும் மும்பையை சேர்ந்த தாக்கூருக்கு மராத்தியில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.