21 நாள் ஊரடங்கு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் உலக மக்கள் அனைவரும் முடங்கியுள்ளனர். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இங்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் உயிரிழப்பு 100ஐ தொட்டுள்ளது. நாடெங்கிலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் என அனைவரும் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதமரின் வேண்டுகோள்
இந்நிலையில், இன்றிரவு 9 மணிக்கு வீட்டின் விளக்குகளை அமர்த்திவிட்டு 9 நிமிடங்களுக்க விளக்குகள், மெழுகுவர்த்திகள் மற்றும் டார்ச் லைட்டுகளை கொண்டு கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்கு அருகில் நின்றுக் கொண்டு ஒளியேற்ற பிரதமர் நரேந்திர மோடி வீடியோ மூலம் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமரின் இந்த முயற்சிக்கு நாடெங்கிலும் பல்வேறு விளையாட்டு வீரர்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
ஒற்றுமையை உலகிற்கு அறிவிக்க வேண்டுகோள்
இந்நிலையில், இந்த நிகழ்வை சிறப்பாக நடத்த நாட்டு மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று கேப்டன் விராட் கோலி கேட்டுக் கொண்டுள்ளார். ஒரு மைதானத்தில் வலிமை அதன் ரசிகர்களிடம் உள்ளது. அதேபோல நாட்டின் வலிமை மக்களிடம் உள்ளது. இன்றிரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கேற்றி நாம் அனைவரும் ஒற்றுமையாக உள்ளதை உலகிற்கு அறிவிப்போம் என்ற விராட் கோலி தெரிவித்துள்ளார்.
|
பணியாளர்களுக்கு பின்னால் மக்கள்
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பேசியுள்ள விராட் கோலி, இந்த நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் நமது மருத்துவ பணியாளர்களின் பின்னால் நாம் அனைவரும் உள்ளதை அவர்களுக்கு உணர்த்த, இந்த ஒளியை நாம் ஏற்றுவோம் என்று தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த வேண்டுகோளை சிறப்பாக செயல்படுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளார்.