இந்தியா தொடர் வெற்றி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துள்ளது. இதில் 3 போட்டிகளில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
விராட் குறித்து சாஸ்திரி பாராட்டு
இந்நிலையில் இந்த வெற்றி குறித்தும் வீரர்கள் குறித்தும் இந்திய அணியின் தலைமை கோச் ரவி சாஸ்திரி பல்வேறு விஷயங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். கோலி குறித்து பாராட்டு தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி அனைத்து விஷயங்களிலும் அவர் நிறைவை எதிர்பார்ப்பார் என்றும் பிட்னசிலும் வேலையிலும் சிறப்பாக செயல்பட விரும்புவார் என்றும் கூறியுள்ளார்.
தமிழக அணிக்காக துவக்கத்தில் விளையாட வேண்டும்
இதேபோல வாஷிங்டன் சுந்தர் குறித்து பேசிய ரவி சாஸ்திரி, அவருக்கு இயற்கையாகவே சிறப்பான திறமை உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அணிக்காக அவர் முதல் 4 இடங்களில் விளையாட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். தேவை ஏற்பட்டால் தமிழக தேர்வாளர்கள் மற்றும் கேப்டன் தினேஷ் கார்த்திக்கிடம் தான் இதுகுறித்து பேசுவேன் என்றும் கூறியுள்ளார்.
சிறப்பான கீப்பிங்
மேலும் மற்றவர்களை காட்டிலும் ஐபிஎல்லில் இருந்து ரிஷப் பந்த் தொடர்ந்து கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் சாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார். அவருடைய பயிற்சிகளில் மூலமாகவே தற்போதைய சிறப்பான பேட்டிங் வந்துள்ளதாகவும் அவருடைய கீப்பிங் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் சாஸ்திரி மேலும் கூறினார்.