மும்பை: "என்னாச்சு நம்ம இந்தியன் டீமுக்கு? எல்லாம் நல்லாத்தானே போயிட்டிருக்கு!!?" என்று ரசிகர்கள் வெளிப்படையாக கேட்காமல், மனதுக்குள் அனத்திக் கொண்டிருக்கும் நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது.
விராட் கோலியின் கேப்டன் பதவி ராஜினாமா அறிவிப்பும், அடுத்த கோச் பற்றிய தகவல்களும் ரசிகர்கள் மத்தியில் இயல்பாக இந்த கேள்வியை எழுப்பியிருக்கிறது.
என்ன தான் நடக்கிறது இந்திய அணியில்? ஏன்.. இந்த திடீர் "நெருக்கடி" போன்ற சூழல்? எல்லாம் நல்லாத்தானே போயிட்டிருக்கு?.. அப்புறம் என்ன கன்ஃபியூஷன்? பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட் அணி என்பது உலகின் சக்தி வாய்ந்த, அதிகாரமிக்க ஒரு பணக்கார கிரிக்கெட் அமைப்பு. அப்படிப்பட்ட அமைப்பில் கேப்டன் பதவி என்பது சர்வபலமும் பொருந்திய பதவி. அதுவும், விராட் கோலி போன்ற ஒரு ஆளுமை மிக்க இளவரசன் அந்த சீட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சூழலில், அந்த சீட்டின் அஸ்திவாரம் இப்போது ஆட்டம் காண தொடங்கியிருக்கிறது. ஏன்..? ஒரு ஆளுமை தானே அந்த சீட்டில் இருக்கிறார்? பிறகு ஏன் இந்த குழப்பம்? காரணம்.. வெவ்வேறு நாடுகளுக்கு சென்று தனியாக நேருக்கு நேர் நின்று போரிட்டு அந்த நாடுகளை வெல்லும் இளவரசன், உலகப் போர் என்று வரும் பொழுது அங்கே சரணடைந்து விடுகிறார். இது தான் பிரச்சனையே! மெகா பலம் பொருந்திய பேரரசுகளை தனது சேனையுடன் தனியாக சென்று தாக்கி சேதப்படுத்தி தனது போர் பலத்தை நிரூபிக்கும் இளவரசன், உலகப் போரில் மட்டும் தோற்பது ராஜாவுக்கு எப்படி பிடிக்கும்? இந்த குட்டி கதை தான், இப்போது இந்திய கிரிக்கெட் அணியில் நடந்து கொண்டிருக்கிறது.
ஓவர் பிரஷர் காரணமாக, டி20 உலகக் கோப்பைக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று "இளவரசன்" கோலி அறிவிக்க, "ராஜா" கங்குலி அதற்கு மறுப்பே தெரிவிக்காமல், "நீங்கள் மாவீரன்.. உங்களை புகழ் என்றும் பாடப்படும்" என்று சிம்பிளாக முடித்துக் கொள்ள, இதிலிருந்தே தெரிகிறது கோலியை பதவி விலகச் சொல்லி பிசிசிஐ தரப்பில் பேசப்பட்டுள்ளது என்பது. இன்றோ, நேற்றோ அல்ல.. பல மாதங்களாக இந்த பேச்சு நடந்து வந்திருக்கிறது. இதற்கு முதலில் ஆர்வம் காட்டாத கோலி, பிசிசிஐ தலைவர் கங்குலியின் அடுத்தடுத்த 'மூவ்'களால் அதிர்ந்து போனது உண்மை. முதல் அதிர்ச்சிக்கு காரணம், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை, இந்திய டி20 அணியின் ஆலோசகராக கங்குலி நியமித்ததில் ஏற்பட்டது.
தோனி அணிக்குள் வந்தால், தனது "பாட்சா" பலிக்காது என்பது கோலிக்கு நன்றாகவே தெரியும். சிம்பிளாக சொல்ல வேண்டுமெனில், 'தல'யிருக்கும் வால் ஆட முடியாது. சுவாரஸ்யத்துக்காக நான் இப்படி சொன்னாலும், 'தோனி இருக்கும் போது, கோலியால் எந்த தனிப்பட்ட முடிவும் எடுக்க முடியாது' என்பதே உண்மை. இதையறிந்தே, தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அறிவித்தார் கோலி. சரி.. ஒருநாள் மற்றும் டெஸ்ட்டின் கேப்டனாக தொடரலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், கங்குலி அவருக்கு வைத்த அடுத்த செக் "அனில் கும்ப்ளே".
எதிர்வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரோடு, ரவி சாஸ்திரி உட்பட இதர பயிற்சியாளர்கள் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால், அடுத்த கோச் யார் என்பதே இப்போது முக்கிய கேள்வியாக உள்ளது. இந்நிலையில், அனில் கும்ப்ளே மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 2016ம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்ற கும்ப்ளேவுக்கும், கேப்டன் கோலிக்கும் நாளுக்கு நாள் உரசல் அதிகமாக, 'எங்களை ஸ்கூல் பிள்ளைகள் போல் நடத்துகிறார்" என்று கோலி தரப்பு புகார் கடிதம் வாசிக்க, விருப்பமின்றி வலுக்காட்டாயமாக வெளியேறினார் (அல்லது)வெளியேற்றப்பட்டார் கும்ப்ளே. அதன் பிறகு பயிற்சியாளரானவர் தான் ரவி சாஸ்திரி. இப்போது, மீண்டும் அதே கும்ப்ளேவை இந்திய அணியின் கோச்சாக நியமிப்பதில் கங்குலி மிகத் தீவிரமாக இருக்கிறார். அப்படி கும்ப்ளே பயிற்சியாளரானால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, மீண்டும் கோலி அவருடன் இணைந்து இலகுவாக பணியாற்ற முடியுமா? இதெல்லாம் நடக்குற காரியமா?
இப்படி, கேப்டன் கோலி கால் வைக்கும் இடமெல்லாம் கங்குலி கண்ணிவெடி வைப்பது ஏன்? உண்மையில், இதனை கங்குலி வேண்டுமென்று செய்ய எந்த காரணமும் இல்லை. அவருக்கு தேவை, தான் பிசிசிஐ தலைவராக இருக்கும் காலத்தில், இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பதே. அந்த கோப்பை தாகம் என்பது கங்குலியை பொறுத்தவரை மிக முக்கியமானது. இதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்வார். யாரைப் பற்றியும் அவர் கவலைப்படவும் மாட்டார். கோலியால் இதுவரை ஐசிசி டிராஃபிகளை வெல்ல முடியவில்லை என்ற ஒரு காரணத்தை தவிர, அவர் மீது எந்த குறையையும் யாராலும் சொல்ல முடியாது. ஏன்.. கங்குலியால் கூட சொல்ல முடியாது. ஆனால், அந்த ஒரு காரணத்தையே கங்குலி பிரதான காரணமாக்கி அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார்.
விராட் கோலி கூடிய விரைவில் மேலும் சில முக்கிய அறிவிப்புகளை ஆச்சர்யப்படுவதற்கில்லை.