டெல்லி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னணி வீரர் வீரேந்திர ஷேவாக் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் ஷேவாக் அதிகாரப்பூர்வமாக இந்த ஓய்வை அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் சில நாட்களுக்கு முன்பு ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் மற்றொரு முன்னணி வீரரான வீரேந்திர ஷேவாக்கும் இன்று துபாயில் தாம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. இருப்பினும் ஷேவாக் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிடவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக துபாய் நிகழ்ச்சி ஒன்றில் தாம் பேசியதை தவறாக புரிந்து கொண்டனர் என ஷேவாக் தெரிவித்ததாக செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
1999ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார் ஷேவாக். 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் கடைசியாக விளையாடினார். அதன் பின்னர் நீண்டகாலம் இந்திய அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,273 ரன்களைக் குவித்திருக்கிறார் ஷேவாக். அதேபோல் அவர் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,586 ரன்களைக் குவித்திருக்கிறார். மேலும் 19 சர்வதேச டி-20 போட்டிகளில் விளையாடி 4,048 ரன்களைக் குவித்திருக்கிறார் ஷேவாக் என்பது குறிப்பிடத்தக்கது.