அணி மாற்றம்
கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் வீரர்கள் மாற்றம் என்பது சர்வ சாதாரணம். ஒவ்வொரு தொடரிலும் இரண்டு அல்லது மூன்று வீரர்கள் அணியில் மாறி இருப்பதை தொடர்ந்து பார்க்க முடியும். ஆனால், இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருவதால் இது குறித்து விமர்சனம் செய்ய நினைத்தாலும், வெளிப்படையாக பேசுவதில்லை.
ரிஷப் பண்ட் நிலை
ஆனால், அதே இந்திய அணியில் விக்கெட் கீப்பராக இளம் வீரர் ரிஷப் பண்ட்டுக்கு அதிக ஆதரவு அளிக்கப்பட்டது. அவர் சொதப்பலாக ஆடிய போதும், அவருக்கு அதிக போட்டிகள் வழங்கப்பட்டன. அதை பல முன்னாள் வீரர்கள் பாராட்டியும் இருந்தனர்.
காயம் காரணமாக மாற்றம்
கடந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். அதனால் தொடர்ந்து மூன்று போட்டிகளுக்கும் துவக்க வீரர் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். அவரது செயல்பாடுகள் பெரும் பாராட்டைப் பெற்றது.
சிறப்பாக செயல்பட்ட ராகுல்
விக்கெட் கீப்பிங் மற்றும் மிடில் ஆர்டரில் ஐந்தாம் இடத்தில் பேட்டிங் செய்ய வைக்கப்பட்ட ராகுல் அதில் சிறப்பாக செயல்பட்டார். முதன்மை விக்கெட் கீப்பர் என கூறப்பட்ட ரிஷப் பண்ட்டை, காட்டிலும் ராகுல் கீப்பிங்கில் கில்லியாக செயல்பட்டார்.
தோனிக்கு மாற்று வீரர்
தோனியைப் போலவே ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் செய்து ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார். பலரும் இவர் தான் தோனிக்கு சரியான மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்றனர். கேப்டன் கோலியும் ராகுலின் அசாத்திய விக்கெட் கீப்பிங் திறமையால் ஈர்க்கப்பட்டார்.
பேட்டிங் சிக்கல்
ஆனால், ராகுல் விஷயத்தில் ஒரே ஒரு சிக்கல் மட்டும் உள்ளது. ரோஹித் சர்மா, தவான் துவக்க வீரர்களாக இருக்கும் வரை ராகுல் மிடில் ஆர்டர் வீரராக ஐந்தாம் வரிசையில் ஆடலாம். ஆனால், அவர்கள் இருவரில் ஒருவர் அணியில் இல்லாத பட்சத்தில் ராகுல் துவக்க வீரராக செயல்பட வேண்டும். எனவே, ராகுலின் பேட்டிங் வரிசை இதுதான் என உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது.
சேவாக் கருத்து
இந்த நிலையில் முன்னாள் வீரர் சேவாக், ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டரில் ஆட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். மேலும், "கேஎல் ராகுல் நான்கு முறை ஐந்தாம் வரிசையில் சரியாக பேட்டிங் செய்யாவிட்டால் தற்போது உள்ள அணி நிர்வாகம் அவரை மாற்றும்." என கேப்டன் கோலியை விமர்சித்தார்.
தோனி அப்படி இல்லை
மேலும், "ஆனால், தோனி அது போல இல்லை. அவர் அது போன்ற பேட்டிங் வரிசையில் வீரர்களை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தை அறிவார். அவரும் அதில் தடுமாறி இருக்கிறார்" என தோனியின் கேப்டன்சி மற்றும் அவர் எப்படி அணியின் மிடில் ஆர்டர் வீரராக மாறினார் என்பது பற்றி குறிப்பிட்டு சுட்டிக் காட்டினார் சேவாக்.
கேப்டன் ஆதரவு வேண்டும்
தற்போதைய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் செய்ய எளிதாக கருதும் நிலையில், மிடில் ஆர்டரில் இருக்கும் வீரர்களுக்கு கேப்டனின் ஆதரவு தேவைப்படுகிறது. வீரர்களுக்கு நேரம் கொடுக்கவில்லை என்றால், அவர்கள் எப்போது கற்றுக் கொண்டு, பெரிய வீரர்களாக வருவார்கள்? என அதிரடியாக கேள்வி எழுப்பினார் சேவாக்.
சேவாக் செய்த தவறுகள்
மேலும், தான் துவக்க வீரராக மாறும் முன், மிடில் ஆர்டரில் நிறைய தவறுகள் செய்து, அதனால் அணி தோற்றுக் கூட போயிருக்கிறது. ஆனால், வெளியில் அமர்ந்து கொண்டு யாரும் பெரிய வீரர்கள் ஆக முடியாது. வீரர்களும் நேரம் தேவை எனவும் கூறினார் சேவாக்.