சிறப்பான ஆர்சிபி அணி
ஐபிஎல் 2020 தொடரில் ஆரம்பத்திலிருந்தே ஆர்சிபி அணி சிறப்பாக விளையாடி வந்துள்ளது. கடந்த இரண்டு சீசன்களை போலல்லாமல் இந்த சீசனில் அந்த அணி சிறப்பான புள்ளிகளை பெற்று முதல் 3 இடங்களில் இருந்தது. மேலும் ப்ளே-ஆப் சுற்றிற்கும் முன்னேறியது.
பேட்ஸ்மேன்கள் சொதப்பல்
ஆயினும் எலிமினேட்டர் சுற்றில் கடந்த வெள்ளிக்கிழமை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதிய ஆர்சிபி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில், குறைந்த ரன்களை மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்ததே தோல்விக்கு காரணம்.
விராட் விலக வலியுறுத்தல்
இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக அந்த அணியின் கேப்டனாக உள்ள விராட் கோலி இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று முன்னாள் இந்திய துவக்க வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். கோப்பையை கைப்பற்ற முடியாத நிலையில், இத்தனை ஆண்டுகள் எந்த அணியாவது ஒரு கேப்டனை தொடர்ந்து வைத்திருக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
கம்பீர் கருத்திற்கு எதிர்ப்பு
இந்நிலையில், விராட் கோலிக்கு முன்னாள் துவக்க வீரர் வீரேந்திர ஷேவாக் ஆதரவு தெரிவித்துள்ளார். கவுதம் கம்பீரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், ஒரு அணியின் கேப்டன் என்பவர், அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளிப்பவராக இருப்பார் என்றும் அதை விராட் சிறப்பாக செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
அணியை பலப்படுத்த வேண்டும்
ஒவ்வொரு கேப்டனுக்கும் சிறப்பான அணி அமைவது அவசியம் என்று குறிப்பிட்டுள்ள ஷேவாக், விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார். கிரிக்பஸ்ஸிற்காக பேசிய அவர், விராட் கோலியை நீக்குவது குறித்து யோசிப்பதை விட்டுவிட்டு ஆர்சிபி, அணியை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்து நிர்வாகம் யோசிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.