மிகச்சிறந்த ஆட்டக்காரர்
இந்திய அணியின் மிகச்சிறந்த ஆட்டக்காரராக பெயர்பெற்ற வீரேந்திர ஷேவாக், டி20, ஒருநாள் சர்வதேச போட்டிகள் உள்ளிட்டவற்றில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மற்ற அணி வீரர்கள் பதட்டமின்றி ஆட வழி செய்து கொடுப்பார்.
ஷேவாக் உருக்கம்
41 வயதாகும் வீரேந்திர ஷேவாக் தன்னுடைய திறமையால் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த உயரத்தை அடைந்துள்ள போதிலும், தன்னுடைய மகன்கள் ஆர்யாவிர் மற்றும் வேதாந்த் தன்னை போல ஆக வேண்டியதில்லை என்று தற்போது தெரிவித்துள்ளார்.
கோலி, ஹர்திக் பாண்டியாவை ரோல் மாடலாக கொள்ளட்டும்
கிரிக்கெட்டில் தன்னுடைய மகன்கள் நுழைய விரும்பினால், தன்னை ரோல் மாடலாக கொள்ளாமல், தோனி, விராத் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா போன்றவர்களை ரோல் மாடலாக கொள்ளட்டும் என்று வீரேந்திர ஷேவாக் தெரிவித்துள்ளார்.
முழு சுதந்திரம் உண்டு
தன்னுடைய மகன்கள் கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற துறைகளில் கால்பதிக்க விரும்பினாலும் அதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு என்றும் ஷேவாக் தெரிவித்துள்ளார். அதற்கு தேவையான உதவிகளை தான் செய்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மாற்றுக் கருத்து இல்லை
அவர்கள் எந்த துறையில் சாதிக்க விரும்பினாலும் அவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்வேன் என்று தெரிவித்துள்ள வீரேந்திர ஷேவாக், ஆனால் அவர்கள் நல்ல மனிதர்களாக விளங்க வேண்டும் என்றும் அதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கூடம் கட்டும் ஷேவாக்
தான் கிரிக்கெட்டில் நல்ல நிலைக்கு வந்துவிட்டால், குழந்தைகள் படிக்க, தங்க மற்றும் விளையாடும் வகையில் ஒரு பள்ளிக்கூடத்தை கட்ட வேண்டும் என்று தன்னுடைய தந்தை ஆசைப்பட்டதாகவும், தான் கிரிக்கெட்டில் பெற்றதை தற்போது சமுதாயத்திற்கு திரும்பி செய்யும் கட்டாயத்தில் உள்ளதாகவும், தந்தையின் கனவை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் ஷேவாக் மேலும் கூறினார்.