17வது போட்டி
ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 17வது போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் மும்பை இநிதியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் இந்த அணிகள் முறையே 2 மற்றும் ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
மும்பை இந்தியன்ஸ் தீவிரம்
இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் முன்னேற முடியும். மேலும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனின் கோப்பையை கைப்பற்றி ஹாட்ரிக் வெற்றிக்கு தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
பும்ரா மீது நம்பிக்கை
இரு அணிகளும் இந்த சீசனில் பேட்டிங்கின் மிடில் ஆர்டர்களில் சிறப்பாக இல்லை. மும்பை அணி இதற்கு சென்னையின் பிட்சை குற்றம் சாட்டி வருகிறது. மேலும் இன்றைய போட்டியில் பும்ராவின் பௌலிங்கின்மீது அதிக நம்பிக்கையை வைத்து போட்டியை அணுகவுள்ளது.
வீரேந்திர சேவாக் கணிப்பு
இதனிடையே, இரு அணிகளின் மூத்த வீரர்கள் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் குறித்த வேறுபாட்டை முன்னாள் துவக்க வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இன்றைய போட்டியில் முகமது ஷமியை காட்டிலும் ஜஸ்பிரீத் பும்ரா குறைவான ரன்களை அளித்து போட்டியை கட்டுப்படுத்துவார் என்று தெரிவித்துள்ளார்.
விக்கெட் எடுக்காத ஷமி
டி20 போட்டிகளில் டெத் ஓவர்களில் முகமது ஷமி தனது லெங்க்த்தை இழந்து விடுவார் என்ற தெரிவித்துள்ள சேவாக் யார்க்கர்களை போடுவதில் பும்ரா சிறப்பாக விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த இரு போட்டிகளில் முகமது ஷமி விக்கெட்டுகள் எதையும் எடுக்காத நிலையில் இன்றைய போட்டியில் சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.