முதல் டெஸ்ட்
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 2010இல் மோதின. அந்த தொடரின் முதல் போட்டி மொஹாலியில் நடைபெற்றது. இந்திய அணியில் டிராவிட், லக்ஷ்மன், சச்சின் டெண்டுல்கர், சேவாக், கம்பீர் உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் இருந்தனர்.
வலுவான இந்திய அணி
ஆஸ்திரேலிய அணியில் ரிக்கி பாண்டிங், ஷேன் வாட்சன், கிளார்க், மைக் ஹஸி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் இருந்தனர். ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும் போது இந்திய அணி வலுவான அணியாக காட்சி அளித்தது.. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.
ஆஸ்திரேலியா ரன் குவிப்பு
முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 428 ரன்கள் எடுத்தது. ஷேன் வாட்சன் 126, டிம் பெய்ன் 92 ரன்கள் குவித்தனர். இந்திய அணியின் ஜாகிர் கான் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். அடுத்து இந்தியா முதல் இன்னிங்க்ஸ் ஆடத் துவங்கியது.
லக்ஷ்மன் காயம்
விவிஎஸ் லக்ஷ்மனுக்கு பீல்டிங் செய்த போது முதுகில் காயம் ஏற்பட்டு இருந்தது. அதன் காரணமாக அவர் பேட்டிங் செய்வாரா? என்ற சந்தேகம் இருந்தது. முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 405 ரன்கள் குவித்தது. சேவாக் 59, டிராவிட் 77, சச்சின் 98, ரெய்னா 86 ரன்கள் குவித்து இருந்தனர்.
வெற்றி இலக்கு
விவிஎஸ் லக்ஷ்மன் 10வது பேட்ஸ்மேனாக இறங்கி பேட்டிங் ஆடி 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். இரண்டாம் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 192 ரன்கள் மட்டுமே எடுத்து, இந்திய அணிக்கு 216 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயம் செய்தது.
கணிப்பு
இந்திய அணியில் விவிஎஸ் லக்ஷ்மன் இல்லாமல் சேஸிங் செய்ய வேண்டிய நிலை இருந்தது. பல முன்னணி பேட்ஸ்மேன்கள் இருந்ததால் லக்ஷ்மன் இல்லாமலேயே இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ஆனால், நடந்ததோ வேறு.
இந்திய வீரர்கள் சொதப்பல்
கம்பீர், ரெய்னா டக் அவுட் ஆனார்கள். சச்சின் 38 ரன்கள் எடுத்தார். மற்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் யாரும் 20 ரன்களை தாண்டவில்லை. விவிஎஸ் லக்ஷ்மன் 7வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். தோனிம ஹர்பஜன் தலா 2 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தோல்வியின் விளிம்பில்..
இந்திய அணி 124 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்து தோல்வியின் விளிம்பில் ஆடி வந்தது. அப்போது இஷாந்த் சர்மா - விவிஎஸ் லஷ்மன் இணைந்து 81 ரன்களுக்கு கூட்டணி அமைத்தனர். இந்தியா 205 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது. விவிஎஸ் லக்ஷமன் - கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஓஜாவுடன் சேர்ந்து 11 ரன்கள் எடுத்து வெற்றி பெறலாம் என திட்டமிட்டார்.
குழப்பம்
விவிஎஸ் லக்ஷ்மனுக்கு அப்போது மாற்று வீரராக ரெய்னா ரன் ஓடி வந்தார். 210 ரன்கள் எடுத்த நிலையில் 58வது ஓவரில் லக்ஷ்மன் பந்தை டிரைவ் செய்தார். ரெய்னா ரன் ஓடத் துவங்கினார். ஆனால், ஓஜா குழப்பத்தில் ரன் ஓடாமல் அங்கேயே நின்றார். அதனால், களத்தில் பதற்றம் ஏற்பட்டது.
கடும் கோபம்
ரெய்னா மீண்டும் கிரீஸுக்குள் பாய்ந்து லக்ஷ்மனை ரன் அவுட் ஆகாமல் காப்பாற்றினார். வெற்றிக்கு அருகே வந்த பின் ஓஜா செய்த குளறுபடியால் கோபம் அடைந்த லக்ஷ்மன் அவரை கடுமையாக திட்டினார். பேட்டை எடுத்து அடித்து விடுவேன் என்பது போலவும் சைகை செய்தார். லக்ஷ்மன் அப்படி கோபம் அடைந்து யாருமே பார்த்திருக்க முடியாது. பின் அடுத்த ஓவரில் இந்தியா வென்றது. லக்ஷ்மன் 79 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இந்தியா 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.