புளோரிடா: டி20 போட்டிகள் நடத்துவதற்கு அமெரிக்கா சிறந்ததாக இருக்கிறது என்றும், மேலும் பல டி20 போட்டித் தொடர்களை அமெரிக்காவில் நடத்த வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் அங்குள்ள புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் மைதானத்தில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையேயான டி20 போட்டித் தொடர் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், நேற்று 2-வது டி20 போட்டியானது முதல் போட்டி நடைபெற்ற அதே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 143 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்தியா 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டியை பாதியிலேயே கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இப்போட்டிக்கு பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இந்திய அணியின் கேப்டன் டோணி கூறியதாவது: மீண்டும் அமெரிக்காவில் வந்து விளையாடுவது சாத்தியமானது தான், இங்கு டி20 போட்டிகள் அல்லது ஒரு நாள் போட்டிகள் விளையாடுவது சிறப்பானதாக இருக்கும். மேலும், மைதானங்கள் நல்ல நிலையில் இருக்கிறது. தொடக்கத்தில் டி20 போட்டிகள் நடத்துவது சிறப்பானதாக இருக்கும்.
அடுத்தடுத்து இரண்டு போட்டிகள் நடைபெற்ற போதிலும், அதில் எங்களுக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை. இங்கு ரசிகர்கள் வருகை தருகிறார்கள். ஒளிபரப்பு செய்வது மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் போட்டியை காணுவதில் நேரம் சரியாக பொருந்தியிருக்கிறது. அனைத்து தரப்பினருக்கும் இங்கு கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதில் திருப்தியளிக்கும் வகையில் உள்ளதால், கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு அமெரிக்கா சிறந்ததாக இருக்கிறது. இந்தியாவின் பந்து வீச்சு சிறப்பாக அமைந்ததோடு, சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா சிறப்பாக பந்து வீசினார் என்று கூறினார்.
இது குறித்து வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் கார்லஸ் பிராவெய்ட் கூயதாவது: இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். நாங்கள் எங்களது முழுதிறனையும் வெளிப்படுத்தி, அதிக ரன்களை எடுக்க முயற்சித்தோம், ஆனாலும் நாங்கள் எதிர்பார்த்த ரன்களை எட்ட முடியவில்லை. எனினும் நாங்கள் எடுத்தது நல்ல ஸ்கோர் தான் என்பதால், வெற்றிபெறுவோம் என நம்பிக்கை இருந்தது. அமெரிக்காவில் மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக இருக்கிறோம் என்று கூறினார்.