வெற்றி பெற்ற கேகேஆர்
கடந்த 26ம் தேதி அபுதாபியின் சையக் சையத் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 8வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்துடன் மோதிய கேகேஆர் அணியின் வீரர்கள் சுப்மன் கில் மற்றும் இயான் மார்கன் ஆகியோர் 4வது விக்கெட்டின்போது பார்ட்னர்ஷிப் அமைத்து 92 ரன்களை குவித்தனர்.
மார்கனுக்கு பாராட்டு
இதையடுத்து அந்த போட்டியில் 70 ரன்களை 62 பந்துகளுக்கு குவித்த சுப்மன் கில்லிற்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. இதேபோல 29 பந்திற்கு 42 ரன்களை மார்கன் அடித்திருந்தார். இந்நிலையில், ஸ்பின்னர்களின் பந்துவீச்சை சிறப்பாக இயான் மார்கன் எதிர்கொள்வதாக கில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சுப்மன் கில் விருப்பம்
இதனிடையே, மார்கனிடம் இருந்து தான் ரிவர்ஸ் ஸ்வீப்பிங் உள்ளிட்டவற்றை கற்றுக் கொள்ள விரும்புவதாக கில் தெரிவித்துள்ளார். மேலும் துவக்க ஆட்டக்காரராகவே தான் களமிறங்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். துவக்க ஆட்டக்காரராக களமிறங்கும்போது நின்று விளையாடுவது மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட தயாராகும் கில்
இந்நிலையில் அடுத்ததாக துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்றிரவு மோதவுள்ளது. இயான் மார்கனுடன் விளையாடி அனுபவம் பெற்றுள்ள சுப்மன் கில், அந்த அனுபவத்துடன் இன்றைய போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.