கங்குலிக்கு பின்..
கங்குலி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார். அவருக்கு பின் தோனி இந்திய அணியை வேறு ஒரு உயரத்துக்கு அழைத்துச் சென்றார். தோனி தலைமையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை வென்றது.
இந்திய அணியில் தோனி
தோனி இந்திய அணிக்குள் நுழைந்த போது ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து இந்திய அணிக்குள் ஒரு வீரர் இடம் பெற்றுள்ளார் என்றே கூறப்பட்டது. அப்போது தோனியின் அதிரடி ஆட்டம் பற்றிய எதிர்பார்ப்பு மட்டுமே இருந்தது.
உயரங்களை தொட்ட தோனி
ஆனால், அதைத் தாண்டி அவர் கேப்டன் ஆவார் என்றோ, உள்ளுணர்வு சார்ந்து முடிவு எடுக்கும் தலை சிறந்த கிரிக்கெட் வீரராக இருப்பார் என்றோ யாரும் நினைக்கவில்லை. அந்த உயரங்களை எட்டி இந்திய அணி இரண்டு உலகக்கோப்பை வெல்லவும் காரணமாக இருந்தார் தோனி.
உலகக்கோப்பை சாம்பியன்
இது பற்றி பேசிய வக்கார் யூனிஸ், "இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்தை கங்குலி தான் துவக்கி வைத்தார். அதை தோனி தொடர்ந்து வழி நடத்திச் சென்றார். அவர் உலகக்கோப்பை சாம்பியன். இரண்டு உலகக்கோப்பைகளையும் வென்றுள்ளார்." என்றார்.
அற்புதமான மனிதர்
"தோனி எப்படிப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரர். அவர் அணியை வழிநடத்திய விதம், அதை வார்த்தையில் சொல்வது மிக கடினம். அவர் பலவற்றையும் புரிந்து கொள்வதில் மிகவும் நல்ல, பெரிய தலைவர். அவர் மிக அற்புதமான மனிதர்" என்று பாராட்டினார் வக்கார் யூனிஸ்.
கிராமத்தில் இருந்து வந்து..
மேலும், "சிறிய கிராமத்தில் இருந்து வந்து அவர் அடைந்த உயரம், மேலும் இத்தனை பெரிய நாட்டை, அணியை வழி நடத்தியது பாராட்டத்தக்கது" என தோனியின் வளர்ச்சி பற்றி மனம் திறந்து பாராட்டினார் வக்கார் யூனிஸ். விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு வருவதையும் குறிப்பிட்டார்.
ஐபிஎல்-இல் தோனி
தோனி கடந்த 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2020 ஐபிஎல் தொடரில் ஆட அவர் ஆர்வமாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதால் தோனி ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.