2019 உலகக்கோப்பை தொடர்
கடந்த 2019 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி சுமாராக ஆடியது. இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்த அந்த அணி, அதன் பின் வேகம் எடுத்தது. எனினும், அது தாமதமான சுதாரிப்பாக அமைந்தது. பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை.
ஆமிர், வஹாப் ரியாஸ் முடிவு
அந்த தொடருக்கு பின் பாகிஸ்தான் அணியில் மாற்றம் செய்வது குறித்து பேசப்பட்டு வந்த நிலையில், முகமது ஆமிர், வஹாப் ரியாஸ் என இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் யாருமே எதிர்பாராத நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தனர்.
ஏன் இந்த முடிவு?
அவர்கள் இருவரும் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் பங்கேற்கவே இந்த முடிவை எடுத்ததாக அப்போது பேசப்பட்டது. அதிலும் முகமது ஆமிர் 30 வயதை கடக்காத வீரர். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு அறிவித்தது கிரிக்கெட் உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சர்ச்சை வீரர்
முகமது ஆமிர் சில ஆண்டுகளுக்கு முன்பு மேட்ச் பிக்ஸிங் புகாரில் சிக்கி அதன் பின், மீண்டும் அணியில் நுழைந்தவர். அவருக்கு மன்னிப்பு அளித்தே அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட ஆமிர், நன்றி மறந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றதால் பலரும் அவர் மீது கடும் விமர்சனத்தை முன் வைத்தனர்.
சிக்கலில் ஆழ்ந்த பாகிஸ்தான்
அவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் துவங்க 15 - 20 நாட்கள் இருந்த நிலையில் ஓய்வு முடிவை அறிவித்தனர். அதனால், பாகிஸ்தான் அணி வேகப் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வதில் திணறியது. அதிரடி முடிவாக 16, 18 வயதில் இரண்டு இளம் வேகப் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்தனர்.
தொடரில் படுதோல்வி
அனுபவம் இல்லாத இளம் வேகப் பந்துவீச்சாளர்களால் ஆஸ்திரேலிய மண்ணில் சாதிக்க முடியவில்லை. அந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளிலும் இன்னிங்க்ஸ் தோல்வியை சந்தித்தது. அதற்கு காரணம், வேகப் பந்துவீச்சு தான் கூறப்பட்டது.
விமர்சனத்தை சந்தித்த வக்கார் யூனிஸ்
அந்த காரணத்தால் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் அணித் தேர்விற்காக கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார். இந்த நிலையில், ஆமிர், வாஹப் ரியாஸ் கடைசி நேரத்தில் துரோகம் செய்து விட்டதாக கூறி பதிலடி கொடுத்தார் வக்கார் யூனிஸ்.
வக்கார் யூனிஸ் என்ன சொன்னார்?
"நாங்கள் ஆஸ்திரேலியாவிற்கு ஒருவர் அல்ல, இரண்டு, மூன்று இளம் வீரர்களை அழைத்துக் சென்றோம். அதற்கு முக்கிய காரணம், ஆமிர், வஹாப் கடைசி நிமிடத்தில் எங்களுக்கு துரோகம் செய்தது தான். அந்த தொடருக்கு 15 - 20 நாட்கள் இருக்கும் போது அவர்கள் இனி டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதில்லை என முடிவு செய்தனர்" என தாக்கிப் பேசினார் வக்கார் யூனிஸ்.
4 ஓவர் வீசி விட்டு..
"உலகம் முழுவதும் நிறைய (டி20) லீக் தொடர்கள் நடைபெறுகின்றன. அதில் எளிதாக பணம் சம்பாதிக்கலாம். நான்கு ஓவர் வீசி விட்டு, மாலையில் ஓய்வு எடுக்கலாம். வீரர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப மாறிக் கொண்டார்கள். நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்." என வக்கார் யூனிஸ் பேசி உள்ளார்.
ஓய்வு முடிவு வலிக்கிறது
அந்த வீரர்கள் யாரிடமும் இது குறித்து முன் கூட்டி விவாதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. அது பற்றி கூறுகையில், "அவர்கள் என்ன நடக்கும் என பெரிதாக சிந்திக்கவில்லை. ட்விட்டரில் அமர்ந்து கொண்டு, ஓய்வு முடிவை அறிவிப்பது, உண்மையில் மிகவும் வலிக்கிறது/" எனவும் கூறினார் வக்கார் யூனிஸ்.