20ம் தேதி அணிகள் பயணம்
ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு தற்போது செப்டம்பர் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதி வரையில் யூஏஇயில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென முன்னதாக வரும் 20 தேதி வாக்கில் ஐபிஎல் அணிகளின் வீரர்கள், கோச்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் யூஏஇக்கு பயணத்தை துவக்கவுள்ளனர்.
பீல்டிங் கோச் பிஜூ ஜார்ஜ்
சன் ரைசர்ஸ் ஐதராபாத்தின் பீல்டிங் கோச்சாக நியமிக்கப்பட்டுள்ள பிஜூ ஜார்ஜூம் தன்னுடைய பயணத்திற்கு தயாராகி வருகிறார். வரும் 23ம் தேதி தங்கள் அணியின் பயணம் துவங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 53 நாட்கள் நடைபெறவுள்ள இந்த தொடர் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.
மிகச்சிறந்த பீல்டர்கள்
இந்நிலையில் தான் ஐபிஎல்லின் பீல்டிங் கோச்சாக நியமிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிஜூ ஜார்ஜ், தனக்கு இந்த துறையில் போதிய அனுபவம் உள்ளதாகவும் அவை அனைத்தையும் தற்போது பிரயோகிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அணியின் டேவிட் வார்னர் மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் சிறந்த பீல்டர்கள் இல்லை என்றும் மிகச்சிறந்த பீல்டர்கள் என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.
அவர் போக்கில் ஆட வேண்டும்
டேவிட் வார்னரை தான் சந்தித்தால் அவர் மிகவும் வியப்பான வீரர் என்று கூற விரும்புவதாகவும், அவர் தன்னுடைய போக்கில் விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவுள்ளதாகவும் பிஜூ தெரிவித்துள்ளார். மேலும் சன் ரைசர்ஸ் ஐதராபாத்தின் மற்ற பயிற்சியாளர்களிடம் இருந்து தான் பல விஷயங்களை கற்றுக் கொள்ள காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிஜூ ஜார்ஜ் புகழ்ச்சி
இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் உலசின் சிறந்த பீல்டர்கள் என்றும் பிஜூ புகழ்ந்துள்ளார். அவர்கள் இருவரும் பேட்ஸ்மேனினின் மனதை புரிந்து அவர்கள் எந்த இடத்தில் அடிப்பார்கள் என்று தெரிந்து அங்கு தங்களின் பீல்டிங்கை செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதை முன்னதாக அறிந்து பீல்டிங் செய்வதே சிறப்பானது என்றும் கூறியுள்ளார்.