28வது போட்டி
ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 28வது போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. போட்டியில் சன்ரைசர்ஸ் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் ராஜஸ்தான் அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.
காரணம் சொன்ன மஞ்ச்ரேகர்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியில் ஜேசன் ஹோல்டர் அல்லது முஜிப்-உர் -ரஹ்மான் அந்த அணிக்கு தேவை என்பதால் அவர்களுக்காக வார்னர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார்.
உண்மையான காரணம்
இது சன்ரைசர்ஸ் அணியின் சிறப்பான முடிவு என்றும் அவர் கூறியுள்ளார். அடுத்த இரு போட்டிகளில் விளையாடுவதில் இருந்தும் டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள மஞ்ச்ரேகர், இதன்மூலம் அவர் கேப்டன்ஷிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கான உண்மையான காரணம் வெளிப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நிலையான போட்டிகளின் அடையாளம்
ஆனால் அவர் நிலையான வீரர் என்பதால் அவரை அணியில் விளையாட வைத்திருக்க வேண்டும் என்றும் மஞ்ச்ரேகர் கூறியுள்ளார். வார்னர் நிலையான போட்டிகளின் அடையாளம் என்றும் அவர் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் சிறப்பான பார்மில் உள்ளதால் அவரை போட்டிகளில் இருந்து நீக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
மாற்றத்திற்கான காரணம்
ஆனால் ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியுடன் இறுதிப்பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி உள்ளது. இதையடுத்து அணியின் உரிமையாளர்களிடம் இருந்து நிர்வாகத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியையே இந்த மாற்றம் காட்டுவதாகவும் மஞ்ச்ரேகர் மேலும் கூறியுள்ளார்.