அடுத்த மாதத்தில் முடிவு
ஐசிசி தலைவராக உள்ள ஷஷாங்க் மனோகரின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. தன்னுடைய பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்க விரும்பவில்லை என்று மனோகர் கூறியுள்ள நிலையில், தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து அடுத்த மாதம் கூடவுள்ள ஐசிசி நிர்வாகிகள் குழு கூட்டம் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதவிமீது ஆசையில்லை
இந்த ஐசிசி தலைவர் பதவிக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஈசான் மணியும் போட்டியிட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதை அவர் மறுத்துள்ளார். இந்த போட்டியில் தான் இல்லை என்றும் அந்த பதவிமீது தனக்கு ஆசையில்லை என்றும் ஈசான் மணி கூறியுள்ளார்.
ஈசான் மணி விளக்கம்
கடந்த 2006ல் ஐசிசி தலைவர் பதவியிலிருந்து விலகிய ஈசான் மணி, தான் அந்த பதவிக்காக போட்டியிட்ட போது, தன்னை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்றும் போட்டியில்லாமல் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். ஐசிசி தலைவர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை என்பதே உண்மை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து அணுகினார்கள்
இதுகுறித்து முன்னமே ஊடகங்களுக்கு தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார். ஆனால் இந்தியாவில் இருந்தே இந்த செய்தி பரவியதாகவும் அங்குள்ளவர்கள் சிலரே தன்னை இந்த தேர்தலில் போட்டியிட கேட்டார்கள் என்றும் ஈசான் மணி மேலும் தெரிவித்தார். தனக்கு இந்த பதவியில் விருப்பமில்லை என்று தான் அவர்களுக்கு பதிலளித்ததாகவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் சவுரவ் கங்குலி இந்த பதவிக்கு போட்டியிடுவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார்.