கோப்பையை இழந்த இந்தியா
கடந்த ஜனவரி 17ம் தேதி முதல் நடைபெற்று வந்த ஐசிசி அன்டர் 19 உலக கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்திருந்த அன்டர் 19 அணி வீரர்கள், தற்போது இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியுள்ளனர். 4 முறை கோப்பையை வென்றுள்ள இந்தியா அன்டர் 19 அணி, முதல்முறையாக இறுதிப்போட்டியில் விளையாடிய வங்கதேசத்தை எதிர்த்து விளையாடிய இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
வங்கதேசம் அணி வெற்றி
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்த நிலையில், துவக்க விரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திவ்யான்ஷ் சக்சேனா களமிறங்கினர். இவர்களில் சக்சேனா 2 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து திலக் வர்மா 38 ரன்கள் மற்றும் ஜூரெல் 22 ரன்கள் என ஆட ஜெய்ஸ்வால் தன்னுடைய சதத்தை நோக்கிய பயணத்தில் தோல்வியடைந்து 88 ரன்களை எடுத்தார். கேப்டன் உள்ளிட்ட மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கங்களிலேயே ரன்களை அடித்து வெளியேறினர்.
3 விக்கெட்டுகளை வீழ்த்திய அவிஷேக்
இவ்வாறு ஜெய்ஸ்வால் தவிர்த்த இந்திய அணி வீரர்கள் அனைவரும் போட்டிப் போட்டுக் கொண்டு பெவிலியனுக்கு திரும்ப, 177 ரன்களுக்கே இந்தியா ஆல்-அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தது. வங்க தேச வீரர் அவிஷேக் தாஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியின் வீரர்களும் சிறப்பாக ஆடவில்லை. 126 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை அந்த அணி பறிகொடுத்தது.
4 விக்கெட்டுகள் எடுத்த ரவி பிஷ்னாய்
41வது ஓவரில் 126 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி விளையாடிக் கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டதால் அந்த அணிக்கு டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இலக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து 42.1 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் வெற்றி பெற்றது. அணியின் கேப்டன் அக்பர் அலி 43 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பௌலர் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கேப்டன் பிரியம் கர்க் வருத்தம்
இந்தப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் போதிய ரன்களை அடிக்காததே தோல்விக்கு காரணம் என்று இந்திய அன்டர் 19 கேப்டன் பிரியம் கர்க் வருத்தம் தெரிவித்துள்ளார். 215 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால் இந்தியா நிச்சம் வெற்றியடைந்திருக்கும் என்று கூறிய அவர், இந்திய வீரர்கள் திறமையாக விளையாடியபோதிலும், இறுதிப்போட்டி தங்களுக்கு சாதகமாக அமையவில்லை என்று மேலும் கூறினார்.