சிறப்பான பார்ட்னர்ஷிப்
இருவருமே மிகவும் நிதானமாக விளையாடிக்கொண்டு, கிடைக்கும் கேப்களில் பவுண்டரிகளை அடித்ததால் சீரான வேகத்தில் ரன் உயர்ந்தது. இருவருமே அரைசதம் கடந்ததால் முதல் விக்கெட்டிற்கு 124 ரன்களை சேர்த்தனர். ஆனால் இதன் பின்னர் தான் இந்திய அணிக்கு கண்டம் ஏற்பட்டது. சிறப்பாக ஆடி வந்த கேப்டன் ஷிகர் தவான் 72 ரன்களுக்கும், சுப்மன் கில் 50 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர்.
பண்ட் மீண்டும் சொதப்பல்
இதன் பின்னர் வந்த அதிரடி ஆட்டக்காரர்கள் ரிஷப் பண்ட் 15 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் 124 - 0 என இருந்த ஸ்கோர் 160 - 4 என மாறியது. இந்திய அணி 250 ரன்களாவது அடிக்குமா என சந்தேகம் ஏற்பட்ட போது, சஞ்சு சாம்சன் - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி தரமான பதிலடியை கொடுத்தனர்.
முக்கிய பார்ட்னர்ஷிப்
ஒருபுறம் சஞ்சு சாம்சன் நிதானமாக சிங்கிள் அடித்து ரன் சேர்க்க, மற்றொருபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக துவம்சம் செய்தார். இதனால் மலமலவென ரன்கள் உயர்ந்தன. இருவரும் சேர்ந்து 5வது விக்கெட்டிற்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 36 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 80 ரன்களும் குவித்தனர்.
தமிழக வீரர் அதிரடி
கடைசி நேரத்தில் உள்ளே வந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ருத்ர தாண்டவம் ஆடினார். 16 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களை அடித்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 306 ரன்களை குவித்தது,.