ஜடேஜாவிற்கு காயம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் வரும் 15ம் தேதி பிரிஸ்பேனில் 4வது போட்டி நடைபெறவுள்ளது. கடந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜாவிற்கு இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது.
ஜடேஜாவிற்கு காயம்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சுற்றுப்பயணத்தில் பல வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா உள்ளிட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டு அவர்கள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர். இதேபோல கடந்த போட்டியின்போது பேட்டிங் செய்த ஜடேஜாவிற்கு கமின்ஸ் வீசிய பந்து பட்டதில் இடதுகை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சை
இந்நிலையில் அவருக்கு கட்டை விரல் காயத்திற்காக ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜடேஜா, சிறிது காலத்திற்கு தான் விளையாட முடியாது என்றும் மீண்டும் பழைய உற்சாகத்துடன் விளையாட வருவேன் என்றும் கூறியுள்ளார்.
ஜடேஜா நீக்கம்
கட்டை விரல் காயம் காரணமாக அடுத்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் பங்கேற்பதும் கடினம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 15ம் தேதி துவங்கவுள்ள 4வது டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.