வாசிம் அக்ரம் பேட்டி
முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், தான் விளையாடிய காலத்தில் மட்டுமின்றி தற்போதும் பல்வேறு சாதனைகளின் சொந்தக்காரராக உள்ளார். தான் விளையாடிய காலத்தில் சக வீரர்கள் இம்ரான் கான், ஜாவித் மியான்டட், முதாசர் நாசர் போன்றவர்களின் ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டு தான் செயல்பட்டதாக கூறுகிறார் அக்ரம்.
திறமையை மதிப்பிட முடியாது
பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு தற்போதுவரை சொந்தக்காரராக உள்ளார் வாசிம் அக்ரம். தற்போதைய டி20 வடிவம் மிகுந்த வியப்புக்குரியதாக உள்ளதாகவும், மக்களின் உற்சாகத்திற்கு காரணமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அக்ரம், ஆனால், தான் இந்த வடிவத்தை கொண்டு வீரரின் திறமையை மதிப்பிட மாட்டேன் என்றும் டெஸ்ட் போட்டிகளை கொண்டே மதிப்பிடுவேன் என்றும் கூறியுள்ளார்.
பும்ராவிற்கு அக்ரம் அறிவுரை
பும்ரா இந்திய அணியின் முதல்தர பௌலராக உள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அக்ரம், இந்திய அணியினர் ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளை தொடர்ந்து விளையாடி வருவதாகவும், பும்ரா போன்ற திறமை மிக்கவர்கள், சர்வதேச போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி, உள்ளூர் போட்டிகளின் பின்னால் ஓடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
புத்துணர்ச்சி, வலிமையுடன் விளையாட வேண்டும்
தான் ஆடிய காலத்தில் 6 மாதங்கள் பாகிஸ்தான் அணிக்காகவும் 6 மாதங்கள் லான்காஷயர் அணிக்காகவும் விளையாடியதை சுட்டிக் காட்டியுள்ள அக்ரம், ஆனால் தற்போதைய காலத்தில் இது மிகவும் கடினமானது என்றும், பும்ரா, கவுண்டி கிரிக்கெட்டில் கவனம் செலுத்தாமல், சர்வதேச போட்டிகளில் மட்டும் விளையாடி, மற்ற நேரத்தில் தன்னுடைய உடலுக்கு ஓய்வு அளித்து, புத்துணர்ச்சி மற்றும் வலிமையுடன் மீண்டும் விளையாட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.