டீன் ஜோன்ஸ் மறைவு
ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் வர்ணனை செய்துவந்த முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் கடந்த செப்டம்பர் மாதத்தில் மும்பையில் காலமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கப்பட்டு கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் கராச்சி கிங்ஸ் அணிக்கு இவர் பயற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
டீன் ஜோன்சிற்கு சமர்ப்பணம்
இந்நிலையில் நேற்றைய பிஎஸ்எல் இறுதிப்போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை அந்த அணி கோச் டீன் ஜோன்சிற்கு அர்ப்பணித்துள்ளது. மேலும் அணியின் பயிற்சியாளர் வாசிம் அக்ரமும் அணியின் இந்த வெற்றியை டீன் ஜோன்ஸ் மற்றும் ரசிகர்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.
கராச்சி கிங்ஸ் வெற்றி
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் பிஎஸ்எல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டு, கடந்த சனிக்கிழமை மீண்டும் துவங்கப்பட்டு நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் கராச்சி கிங்ஸ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட லாகூர் கலந்தர்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது.
பிஎஸ்எல் வீரர்கள் அஞ்சலி
கொரோனாவிற்கு முன்னதாக நடைபெற்ற லீக் போட்டிகளின்போது கராச்சி அணியின் பயிற்சியாளராக டீன் ஜோன்ஸ் செயல்பட்டு வந்தார். கடந்த சனிக்கிழமை மீண்டும் தொடர் துவங்கிய நிலையில், அந்த போட்டியில் பங்கேற்ற கராச்சி கிங்ஸ் மற்றும் முல்தான் சுல்தான் அணி வீரர்கள் ஜோன்சின் முதல் எழுத்தை குறிக்கும் வகையில் மைதானத்தில் 'டி' உருவத்தை கொண்டு வந்தனர்.