மாலிக் கய்யாம் அறிக்கை
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான நீதிபதி மாலிக் கய்யாம் அறிக்கை பெரும் புயலைக் கிளப்பியது. அப்போது பல முன்னணி வீரர்கள் அடங்கிய பாகிஸ்தான் அணி மீது பல்வேறு மேட்ச் பிக்ஸிங் புகார்கள் கூறப்பட்டது.
முன்னணி வீரர்கள்
நீதிபதி மாலிக் கய்யாம் நடத்திய விசாரணையில் சலீம் மாலிக், அடா உர் ரஹ்மான், வாசிம் அக்ரம், இன்சமாம் உல் ஹக், முஷ்டாக் அஹ்மது, வக்கார் யூனிஸ், அக்ரம் ராசா, சயீத் அன்வர் என பல முன்னணி வீரர்களின் பெயர் அடிபட்டது.
இருவருக்கு வாழ்நாள் தடை
அவர்களில் சலீம் மாலிக் மற்றும் அடா உர் ரஹ்மான் ஆகிய இருவருக்கு மட்டும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அந்த விசாரணையில் ஆதாரம் இன்றி ஒவ்வொரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும் பிறர் மீது சரமாரியாக புகார் கூறி இருந்தனர்.
வெறும் அபராதம்
அதனால், யார் சொல்வது உண்மை என தெரியாத நிலையில், பலருக்கு வெறும் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. அவர்களில் பலர் தொடர்ந்து கிரிக்கெட் ஆடியதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 2000மாவது ஆண்டு வெளியான அந்த அறிக்கை பற்றி சமீபத்தில் விவாதங்கள் நடைபெற்றன.
கடும் விமர்சனம்
அந்த அறிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முற்றிலும் ஏற்றுக் கொள்ளாதது பற்றியும், மேட்ச் பிக்ஸிங்கில் சிக்கியவர்களுக்கு தொடர்ந்து பாகிஸ்தான் தேசிய அணியில் வாய்ப்பு கொடுத்தது பற்றியும் கடும் விமர்சனம் முன் வைக்கப்பட்டது.
நடவடிக்கைகள் இல்லை
அந்த அறிக்கையில் வாசிம் அக்ரம் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டும், பெரிதாக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் வாசிம் அக்ரம் மீது ஆமிர் சோஹைல் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
அக்ரமின் கேப்டன் பதவி
1992இல் பாகிஸ்தான் உலகக்கோப்பை வென்ற பின், இரண்டு உலகக்கோப்பை தொடருக்கு வாசிம் அக்ரம் கேப்டனாக இருந்தார். எப்படியோ சரியாக உலகக்கோப்பைக்கு முன் அவர் கேப்டன் பதவியை பெற்றதாகவும் அது பற்றி விசாரணை நடக்க வேண்டும் எனவும் கூறினார் ஆமிர் சோஹைல்.
உலகக்கோப்பை குறித்த புகார்
மேலும், வாசிம் அக்ரம் 1992, 1996 மற்றும் 2003 உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை வெல்லாமல் பார்த்துக் கொண்டார் எனவும், அவர் பாகிஸ்தானுக்கு உண்மையாக இருந்திருந்தால் பாகிஸ்தான் அந்த மூன்று முறையும் உலகக்கோப்பை வென்று இருக்கும் எனவும் அதிர்ச்சி புகாரை கூறினார் சோஹைல்.
விளம்பரம் தேட முயற்சி
இந்த நிலையில், இதற்கு பதில் அளிக்காமல் ஆமிர் சோஹைல் பெயரை குறிப்பிடாமல் சிலர் தன் பெயரை வைத்து விளம்பரம் தேட முயல்கிறார்கள் என கடுமையாக சாடி நழுவி உள்ளார் வாசிம் அக்ரம். ஓய்வு பெற்று 17 ஆண்டுகள் கழித்தும் தன் மீது பிறர் வைத்து இருக்கும் மரியாதை பற்றி தான் நினைத்துக் கொள்வதாகவும் கூறி உள்ளார்.
நானும் பேச முடியும்
மேலும், தான் கூட அவர்களைப் பற்றி மோசமாக பேச முடியும். ஆனால், அதனால் என்ன நடக்கப் போகிறது? அதனால் தான் நான் அமைதியாக இருக்கிறேன் எனவும் கூறி உள்ளார் வாசிம் அக்ரம். 17 ஆண்டுகளுக்கு பின்பும் தன் பெயரை மோசமாக பயன்படுத்தி வருவது வருத்தம் அளிப்பதாகவும் கூறி உள்ளார்.