மீண்டும் கொரோனா
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்து வந்த கொரோனா வைரஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு பிரபலங்களும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மருத்துவமனை
கடந்த சில தினங்களாக அவர் வீட்டு தனிமையில் இருந்த நிலையில் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கு நன்றி. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நான் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளேன். சில நாட்களில் மீண்டு வருவேன். அனைவரும் பாதுகாப்பு இருங்கள். என தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் உலகக்கோப்பையை வென்ற 10வது ஆண்டு தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|
வாழ்த்து
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வசீம் அக்ரம் சச்சின் நலமுடன் திரும்ப வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த ட்வீட்டில் அவர், சச்சின் நீங்கள் 16 வயதிலேயே உலகின் தலை சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்த்து நிற்கும் தைரியம் பெற்றவர். இந்த கொரோனாவை நீங்கள் சிக்ஸர் அடித்து துறத்துவீர்கள் என எனக்கு தெரியும். மீண்டு வா மாஸ்டர். நீங்கள் மருத்துவர்களுடன் உலகக்கோப்பையை வென்ற 10வது ஆண்டு தினத்தை கொண்டாடியிருந்தால் புகைப்படத்தை அனுப்புங்கள் என தெரிவித்துள்ளார்.
நீண்ட கால நட்பு
1990 - 2000 காலக்கட்டங்களில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பாகிஸ்தான் வீரர் வசீம் அக்ரம் ஆகியோருக்கு இடையே பல சுவாரஸ்ய போட்டிகள் நடைபெற்றுள்ளன. கடந்த 2003ம் ஆண்டு வசீம் அக்ரம் ஓய்வு பெற்ற நிலையில் சச்சின் டெண்டுல்கர் 2013ம் ஆண்டு அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.