மும்பை : இந்திய அணியில் குறிப்பாக ரஞ்சிக் கோப்பை தொடர்களில் அதிகமாக விளையாடியுள்ள இந்திய வீரர் வாசிம் ஜாபர், சர்வதேச போட்டிகளில் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக விளையாடிவரும் ஜாபர், மும்பை மற்றும் விதர்பா அணிகளுக்காக விளையாடியவர். அதிக ரஞ்சிக் கோப்பையில் விளையாடி சாதித்தவர். மேலும் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்களை குவித்தும் சாதனை புரிந்தவர்.
அழகான இந்த விளையாட்டை தன்னுடைய கேரியராக தான் தேர்ந்தெடுத்து விளையாட வாய்ப்பளித்த கடவுளுக்கும், தன்னுடைய மனைவி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் ஜாபர் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்திய அணிக்காக கடந்த 1996 -97 முதல் ஆடிவரும் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர், இன்று சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த 20 வருடங்களாக சர்வதேச போட்டிகள் மற்றும் ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் ஜாபர், இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 1,944 ரன்களை அடித்தவர். மேலும் சர்வதேச ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் அவர் ஆடியுள்ளார். இவருடைய சராசரி 34.11.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இவர் 212 அடித்து தூள் கிளப்பினார். இந்திய அளவில் சில வீரர்களே இரட்டை சத சாதனையை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2006ல் இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இவர் முதல் முறையாக களமிறங்கி ஆடினார். மேலும் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் இவர் சிறந்து விளங்கியுள்ளார்.
ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் தொடர்ந்து விளையாடிவந்த ஜாபர், அந்த போட்டிகளில் அதிகபட்சமாக 12,000 ரன்களை குவித்துள்ளார். இதுவரை 260 போட்டிகளை விளையாடியுள்ள இவர், இந்த சாதனையை எட்டிய முதல் வீரர். தன்னுடைய ஸ்டைலான குறிப்பாக கவர் டிரைவ் ஷாட்களால் அறியப்படும் ஜாபர், 150 ரஞ்சிப் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்.
மும்பை அணிக்காக அதிகமாக விளையாடியுள்ள ஜாபர், விதர்பா அணிக்காகவும் விளையாடியுள்ளார். இவரது ஷாட்களின் மூலம் எதிரணி பௌலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியுள்ளார். தற்போது ஓய்வு அறிவித்துள்ள ஜாபர், அழகான இந்த கிரிக்கெட்டை தன்னுடைய கேரியராக எடுத்து தான் விளையாட வாய்ப்பளித்த கடவுளுக்கும், இங்கிலாந்தில் சொகுசான வாழ்க்கையை விட்டுவிட்டு, தனக்காகவும் தன்னுடைய குழந்தைகளுக்காகவும் இங்கு உள்ள தன்னுடைய மனைவி, நண்பர்கள், தன்னுடைய ஆட்டத்திற்கு உதவிபுரிந்த பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மேலும் தன்மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து தன்னை தேர்ந்தெடுத்த தேர்வாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.