உலகக்கோப்பையில் தோனி
2019 உலகக்கோப்பை தொடர் தான் தோனியின் கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடர். அந்த தொடரில் அரையிறுதிப் போட்டியுடன் இந்திய அணி வெளியேறியது. அப்போது தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என வதந்தி பரவியது.
தோனி நிலை
ஆனால், தோனி ஓய்வை அறிவிக்கவில்லை. தொடர்ந்து இந்திய அணியில் எந்தப் போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தத்திலும் அவர் பெயர் நீக்கப்பட்டது. அடுத்து ஐபிஎல் தொடரில் மட்டுமே அவர் பங்கேற்க காத்துக் கொண்டு இருக்கிறார்.
மாற்று வீரர்கள்
தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக இடம் பெற்றார். பின் அவருக்கும் மாற்றாக கேஎல் ராகுல் தற்போது அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். இவர்கள் இருவரை தாண்டி தான் தோனி அணியில் இடம் பெற முடியும் என்ற நிலை உள்ளது.
ரிஷப் பண்ட் சுமார்
ரிஷப் பண்ட் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் சுமாராகவே செயல்பட்டு வருகிறார். எனினும், அவருக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கு மாற்றாக ராகுல் ஒருநாள் மற்றும் டி20 அணியில் விக்கெட் கீப்பராக இடம் பெற்று வரும் நிலையிலும் பண்ட்டுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ராகுல் அபாரம்
ராகுல் விக்கெட் கீப்பிங்கில் அதிக அனுபவம் இன்றி இருந்தாலும், மிக சிறப்பாக கீப்பிங் செய்து வருகிறார். பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ராகுலுக்கு, கீப்பிங் கூடுதல் பணிச்சுமை அளிப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தோனி சிக்கல்
ரிஷப் பண்ட், ராகுல் இருக்கும் நிலையில், தோனி மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டி, ஐபிஎல் தொடரை நம்பி இருந்தார். ஆனாலும், அவருக்கு அணியில் இடம் கிடைக்காது என பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தான் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து கூறி உள்ளார்.
ஜாபர் ஆதரவு
வாசிம் ஜாபர் கூறுகையில், தோனி ஸ்டம்புகளுக்கு பின்னும், பின்வரிசை பேட்டிங்கிலும் அணியின் சொத்து என குறிப்பிட்டார். அவர் அணிக்கு வந்தால் ராகுல், பண்ட் நிலை என்ன என்பது பற்றியும் அவர் கருத்து கூறி உள்ளார்.
என்ன சொன்னார்?
அவரின் பதிவு - "தோனி உடற்தகுதியுடனும், பார்மிலும் இருந்தால் அவரைத் தாண்டி இந்திய அணியை நம்மால் சிந்திக்க முடியாது. ஏனெனில், அவர் ஸ்டம்புகளுக்கு பின்னும், பின்வரிசை பேட்டிங்கிலும் சொத்து" என குறிப்பிட்டு இருந்தார் ஜாபர்.
ராகுல், பண்ட் நிலை
மேலும், "தோனி வருகையால் ராகுல் கீப்பிங் செய்ய வேண்டிய அழுத்தத்தில் இருந்து விடுபடுவார். இடது கை பேட்ஸ்மேன் தேவை என நினைத்தால், பண்ட்டை வெறும் பேட்ஸ்மேனாக பயன்படுத்தலாம்" எனவும் குறிப்பிட்டார் வாசிம் ஜாபர்.
ஐபிஎல் ரத்து?
ஜாபர் கூறுவது சரிதான் என்றாலும், தோனி தன் உடற்தகுதி மற்றும் பார்மை நிரூபிக்க ஐபிஎல் தொடரில் ஆட வேண்டும். தற்போது கொரோனா அச்சம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.