வாட்சன் அதிரடி
இந்த நிலையில், ராய்ப்பூரில் சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் சீரிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய வாட்சன் வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார். 21 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும்.
ரன் குவிப்பு
இதனைத் தொடர்ந்து பொறுமையாக விளையாடிய அலெக்ஸ் டுலன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். காலம் பெகுர்சன் 10 ரன்களிலும், நாதன் 5 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறு முனையில் பென் டங் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். 26 பந்துகளில் 46 ரன்கள் அவர் விளாசினார்.
ரெய்னா அபாரம்
இதில் 5 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இந்திய அணியிடமிருந்து வெற்றியை அபகரிப்பது போல் அவரது ஆட்டம் இருந்த நிலையில், ரெய்னாவின் ஒரு கேட்ச் ஆட்டத்தையே மாற்றியது. பென் டங் அடித்த பந்தை பாயிண்டில் நின்ற ரெய்னா பாய்ந்து கேட்ச் பிடித்தார். இதன் மூலம் பென் டங் ஆட்டமிழந்தார். ரெய்னாவின் இந்த கேட்சை பார்த்து சச்சின் உள்ளிட்ட வீரர்கள், அவரை கட்டி அணைத்து கொண்டாடினர்.
|
டிரெண்டிங்கில் ரெய்னா
35 வயதான ரெய்னா, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகி 2 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஒரு ஆண்டாக கிரிக்கெட்டே விளையாடாத நிலையில், ரெய்னா பாய்ந்து பிடித்த கேட்ச் தற்போது டிரெண்டிங் ஆகிறது. ஆஸ்திரேலிய லெஜண்ட்ஸ் அணி 17 ஓவரில் 136 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடிய நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. இன்று மதியம் 3.30 மணிக்கு ஆட்டம் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கப்படும்.