172 ரன்கள் சேசிங்
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தவற விட்டது டெல்லி கேபிடல்ஸ் அணி. 172 ரன்கள் சேசிங்கை மேற்கொண்ட டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர்கள், ஆர்சிபி அணியின் பௌலர்களின் தீவிரத்திற்கு முன்பு தோற்றனர்.
சிராஜின் அதிரடி பௌலிங்
இறுதி ஓவர்களில் ரிஷப் பந்த் மற்றும் ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து அரைசதங்களை அடித்தனர். பந்த் மற்றும் ஹெட்மயர் முறையே, 58 மற்றம் 53 ரன்களை அடித்து துவம்சம் செய்தனர். ஆயினும் இறுதி ஓவரில் சிராஜின் அதிரடி பௌலிங்கின் முன்னால் அவர்களால் வெற்றியை சாத்தியப்படுத்த முடியவில்லை.
சிறப்பான ஹெட்மயர்
நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய டெல்லி அணியின் பேட்ஸ்மேன் ஷிம்ரன் ஹெட்மயர் 25 பந்துகளில் அரைசதத்தை அடித்திருந்தார். இந்த தொடரில் அவர் அடித்துள்ள முதல் அரைசதம் இதுவாகும். ஆயினும் வெற்றிபெற முடியாதது மனதை உடைய செய்துள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் இதை அவர் கூறியுள்ளார்.
வெற்றிக்கு அருகில் அணி
ஆயினும் தங்களது அணி வெற்றிக்காக கடினமாக போராடியதாகவும் வெற்றிக்கு அருகில் சென்றதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆனால் கிரிக்கெட்டில் இவையெல்லாம் நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில போட்டிகளில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிகமாக கற்க வேண்டும்
ஆர்சிபிக்கு எதிரான இந்த போட்டியில் இருந்து அதிகமாக கற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டியில் ரிஷப் பந்த்துடன் இணைந்து அவர் 78 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்த நிலையில், தொடர்ந்து இதுபோன்ற வாய்ப்புகள் இனிவரும் போட்டிகளில் தனக்கு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.