முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ்
இந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி வழக்கம்போல சிறப்பாக விளையாடி வருகிறது. நேற்றைய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான போட்டிக்கு பிறகு ஐபிஎல் பட்டியலில் முதலிடத்தில் வந்து கெட்டியாக ஒட்டிக் கொண்டுள்ளது. நேற்றைய போட்டியில் ரோகித், கீரன் பொல்லார்டு மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
சிறப்பான பொல்லார்டு, பாண்டியா
முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா 45 பந்துகளில் 70 ரன்களை அடித்து தூள் கிளப்ப, தொடர்ந்து வந்த கீரன் பொல்லார்டு 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ரன்களும் ஹர்திக் பாண்டியா 11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 30 ரன்களும் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர்.
வானமே எல்லை
அடுத்ததாக களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 143 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனிடையே போட்டியில் மேன் ஆப் த மேட்ச் விருது பெற்ற பொல்லார்டு, இறுதி 4 ஓவர்களில் ரன்களை அடிக்க வானமே எல்லை என்று தானும் பாண்டியாவும் உணர்ந்திருந்ததாக தெரிவித்தார். ஹர்திக் சிறப்பாக விளையாடியதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
மும்பை இந்தியன்ஸ் பாராட்டு
ஆட்டத்தின்போது நமக்கு முன்னால் என்ன இருக்கிறது என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நமக்கு முன்னால் உள்ள பௌலர்கள் மற்றும் நாம் அடிக்க வேண்டிய ரன்களை பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும் என்றும் மற்றதை பற்றி யோசிக்காமல் அடித்து தூள் கிளப்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து அவரது ஆட்டத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளது.