பேட்ஸ்மேன்.. ஸ்பின்னர்.. பீல்டர்
இடது கை ஆட்டக்காரராக திகழும் சுரேஷ் ரெய்னா, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தம்பூலாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு எதிராக தனது முதல் போட்டியை துவக்கினார். சிறந்த பேட்ஸ்மேனாகவும் ஸ்பின்னராகவும், சிறப்பான பீல்டராகவும் தன்னை உருவாக்கிக் கொண்டுள்ள சுரேஷ் ரெய்னா, கடந்த 2011 உலக கோப்பை வெற்றியின்போது அணியில் இடம்பெற்றிருந்தார்.
62 விக்கெட்டுகள்
கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் சிறப்பாக விளையாடி சதங்களை விளாசி தள்ளுபவர் சுரேஷ் ரெய்னா. இந்திய அணிக்காக 18 டெஸ்ட் போட்டிகளிலும் 226 ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் 78 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் 62 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல்லில் அதிக ரன் குவிப்பு
ஒருநாள் போட்டிகளில் 5615 ரன்களை 35.31 சராசரியில் அடித்துள்ள ரெய்னா, சிஎஸ்கேவில் தொடர்ந்து விளையாடிவருகிறார். விராட் கோலிக்கு அடுத்ததாக ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்களை அடித்துள்ள வீரராக உள்ளார். தன்னுடைய 16வது வயதில் ரஞ்சிக் கோப்பைக்காக விளையாடியுள்ள ரெய்னா, 19வது வயதில் இந்திய அணியில் இடம்பிடித்துவிட்டார்.
மனைவி பிரியங்கா மெசேஜ்
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 15வது ஆண்டை நேற்றைய தினம் பூர்த்தி செய்துள்ளார் சுரேஷ் ரெய்னா. இதையொட்டி சக வீரர்கள் பாராட்டு தெரிவித்த நிலையில், ரெய்னாவின் மனைவி பிரியங்கா, உணர்வுபூர்வமான மெசேஜை தனது டிவிட்டர் பக்கத்தில் அளித்துள்ளார்.
பெருமையாக இருக்கிறது
தன்னுடைய விளையாட்டிற்கு எவ்வளவு உண்மையாக ரெய்னா இருக்கிறார் என்பதையும் எவ்வளவு தூரம் கடின உழைப்பை தருகிறார் என்பதையும் பிரியங்கா தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் ரெய்னாமீது செலுத்தும் அன்பால் அவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் அவர் தெரிவித்துள்ளார். ரெய்னாவை நினைத்து தான் மிகவும் பெருமை அடைவதாகவும் கூறியுள்ளார்.