சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள்
கேப்டன் கூல் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தன்னுடைய பெயருக்கேற்றாற் போல தன்னை சூழ்ந்தவர்களை கூலாக வைத்துக் கொள்பவர். அணியின் வெற்றிக் கொண்டாட்டங்களின்போது இவரை முன்னால் காண முடியாது. அதேபோல அணி தோல்வி அடையும்போது அதை தன்னுடைய தோள்களில் ஏற்றிக்கொண்டு அதற்கு விளக்கம் அளிக்கும் பண்புடைய தோனிக்கு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
6 மாதங்களாக விளையாடாத தோனி
கடந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் நியூசிலாந்துடன் மோதிய அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதிலிருந்து சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் தோனி. அவரது வருகைக்காக அணி மட்டுமின்றி ரசிகர்களும் காத்திருக்கும் நிலையில், தன்னுடைய வருகை குறித்து அவர் வாய் திறக்காமல் உள்ளார்.
வீடியோ வெளியிட்ட சாஹல்
ரசிகர்கள் மட்டுமின்றி அணி வீரர்களும் தோனியின் வருகைக்காக காத்திருப்பதற்கு சமீபத்திய உதாரணம் அணியின் பந்து வீச்சாளர் சாஹல் வெளியிட்ட வீடியோதான். அணியினருடன் மைதானத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த சாஹல், தோனியை இந்திய அணி மிஸ் செய்வதாகவும் அவருடைய இருக்கை மட்டுமின்றி அணி வீரர்களும் அவருக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
|
"தோனியை மிஸ் செய்கிறோம்"
இந்தியா -நியூசிலாந்து இடையிலான சர்வதேச டி20 தொடரின் 4வது போட்டி வெல்லிங்டனின் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின்போது நியூசிலாந்து ரசிகர்கள் தோனியை தாங்கள் மிஸ் செய்வதாக பேனர் வைத்து தங்களது உருக்கத்தை காட்டியுள்ளனர். இதன்மூலம் சர்வதேச அளவில் தோனிக்கான கிரேஸ் சற்றும் குறையவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
சர்வதேச போட்டிக்கு திரும்புவாரா?
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக களமிறங்கி தோனி விளையாட உள்ளது அவரது ரசிகர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. மேலும் அவர் தனது முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும் என்பதும், விரைவில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்ப வேண்டும் என்பதுமே அவரது ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.