புதிய துவக்க இணை
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான நேற்றைய 5வது டி20 போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது. டி20 உலக கோப்பை தொடரையொட்டி இந்த போட்டியில் பல்வேறு முயற்சிகள், புதிய துவக்க இணைகள் முயற்சித்து பார்க்கப்பட்டன.
94 ரன்களை குவித்த பார்ட்னர்ஷிப்
நேற்றைய போட்டியில் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கி பார்ட்னர்ஷிப்பில் 94 ரன்களை குவித்தனர். இந்த இணை போட்டியை வெற்றிப்பாதையில் நடைபோட வைத்தது. போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணை கேப்டன் ரோகித் சர்மா, டி20 உலக கோப்பை தொடரில் தன்னுடன் விராட் கோலி துவக்க வீரராக களமிறங்க விரும்பினால் அது சிறப்பாக நடைபெறும் என்று கூறியுள்ளார்.
அணியின் நலன் முக்கியம்
ஆனால் அணியின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அனைத்தும் கேப்டனின் கைகளில்தான் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டு செயல்படுத்த வேண்டும் என்றும் அதற்கு கால அவகாசம் அதிகமாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். ஆனால் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக ஐபிஎல் மற்றும் சில டி20 தொடர்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விளையாடாதது துரதிர்ஷ்டவசமானது
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் கேஎல் ராகுல் விளையாடாதது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் அணியின் முக்கிய வீரர் என்றும் ரோகித் சர்மா மேலும் கூறினார். அவர் அணிக்காக விளையாட மாட்டார் என்று கருத முடியாது என்றும் எல்லாம் மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிறப்பான செயல்பாடு
இதேபோல, புவனேஸ்வர் குமார் அணியின் முன்னணி பௌலர் என்றும் நெருக்கடியான நேரத்தில் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதாகவும் ரோகித் தெரிவித்துள்ளார். பனிப்பொழிவு இருந்த நேரத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டது எளிதானதல்ல என்றும் எந்த நேரத்திலும் சிறப்பாக செயல்படுவார் என்பதை அவர் நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.