ஸ்பின்னர்களின் ஆதிக்கம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 2வது மற்றும் 3வது போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டிகளில் இந்திய ஸ்பின்னர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.
பிட்ச் குறித்த விமர்சனம்
குறிப்பாக அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் 30 விக்கெட்டுகளில் 27 விக்கெட்டுகளை ரவி அஸ்வின், அக்சர் படேல், ஜோ ரூட் உள்ளிட்ட ஸ்பின்னர்கள் எடுத்துள்ளனர். இதையடுத்து மைதானத்தின் பிட்ச் குறித்து மிகப்பெரிய விமர்சனங்கள் எழுந்துள்ளது. முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஸ்பின் குறித்து கதறல்
இந்நிலையில் இந்த போட்டியை தான் பார்த்ததாகவும் சிறப்பான போட்டியாக அமைந்திருந்ததாகவும் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லியோன் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால் பந்து ஸ்பின் ஆனாலே அனைவரும் கதறத் துவங்கி விடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பின் குறித்த விமர்சனங்கள்
ஆஸ்திரேலிய அணியும் இத்தகைய ஸ்பின் பந்துகளை எதிர்கொண்டு 47, 60 ரன்களில் ஆல்-அவுட் ஆகியுள்ளதாகவும் ஆனால் அப்போதெல்லாம் யாரும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் ஆனால் தற்போது பிட்ச் குறித்து அதிகமாக விமர்சனங்களை வைத்து வருவதாகவும் இதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.