இந்திய சுற்றுப்பயணம்
கடந்த 2018 -19ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியினர், அந்த தொடரை 2க்கு ஒன்று என்ற கணக்கில் வென்றனர். இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் அதாவது டிசம்பர் மாதத்தில் இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின்போது ஒரு பகலிரவு போட்டி உள்பட 4 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளன.
ஜோஷ் ஹாசல்வுட் கருத்து
இந்த தொடர் ஆரம்பிக்க இன்னும் சில மாதங்கள் உள்ள போதிலும், இப்போதே ஆஸ்திரேலியா மற்றும் இந்திய வீரர்கள் இந்த தொடர் குறித்து பேசத் துவங்கியுள்ளனர். இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையும் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு வரும்நிலையில், தற்போது இந்திய கேப்டன் விராட் கோலியை திட்டமிட்டு காய் நகர்த்தி வெற்றி கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பௌலர் ஜோஷ் ஹாசல்வுட் தெரிவித்துள்ளார்.
விராட் சிறப்பாக ஆடுவார்
கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக பேசிய ஜோஷ் ஹாசல்வுட், கடந்த தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பாடம் கற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த முறையும் விராட் கோலி மிகவும் தீவிரமாக விளையாடி அவரின் சிறப்பான ஆட்டத்தை வழங்குவார் என்று தாங்கள் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுப்படுத்த முடியாத ஆட்டம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பீல்டிங் செய்யும்போது விராட் கோலியின் ஆட்டத்தை சிறிது மட்டுப்படுத்தலாம். ஆனால் பேட்டிங் செய்யும்போது, அவர் இஷ்டத்திற்கு அவரை ஆடவிடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் ஹாசல்வுட் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது மனநிலையை அவுட் செய்துவிட்டு அதிலிருந்து பலனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.