கேன்பெரா : தங்களது குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்ததாகவும் இளவயதில் எப்போதுமே பணத்திற்காக கஷ்டப்பட்டதாகவும் இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் தனக்கு எல்லாவற்றையும் கொடுத்து தன்னை மேம்படுத்தியுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஜடேஜாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 92 ரன்களை குவித்து அணியை வெற்றி பெற செய்துள்ளார் ஹர்திக் பாண்டியா.
ஐபிஎல்லில் தன்னுடைய அணிக்காக சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா, தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரிலும் மொத்தமாக 251 ரன்களை குவித்து அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார். குறிப்பாக கடந்த 3வது மற்றும் இறுதிப் போட்டியில் 92 ரன்களை அடித்து அணியை வெற்றி பெற செய்துள்ளார். மேலும் பல மாதங்களுக்கு பிறகு தன்னுடைய பௌலிங்கை துவக்கியுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய சிறுவயதில் தன்னுடைய குடும்பம் பணத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டதாகவும் ஆனாலும் தாங்கள் மகிழ்ச்சியுடன் இருந்ததாகவும் பாண்டியா கூறியுள்ளார். கிரிக்கெட் தனக்கு எல்லாவற்றையும் தந்துள்ளதாகவும் உறவுகளையும் கொடுத்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.