டெஸ்ட் தொடர் வெற்றி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களில் தொடர்கள் அடுத்தடுத்து திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முதலில் ஆடப்பட்டுள்ள 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3க்கு 1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த 2 போட்டிகளில் இந்திய அணி வீரர்களின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது.
இந்திய அணி தகுதி
இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. வரும் ஜூன் 18 முதல் 22 வரை லார்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ள நிலையில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நியூசிலாந்து அணியுடன் இந்தியா ஆடவுள்ளது.
இந்தியா சிறப்பு
இந்நிலையில் நேற்றைய வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கேப்டன் விராட் கோலி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மிகுந்த தகுதி வாய்ந்த அணி என்று கூறியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக இதற்கென இந்திய அணி விட்டுக் கொடுக்காமல் சிறப்பாக விளையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசுவாசத்தை ஏற்படுத்திய வெற்றி
இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், தற்போது அந்த மிகப்பெரிய போட்டியில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். அணியாக இந்த வெற்றியை கொண்டாடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது மிகுந்த ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.