ஐபிஎல் 2021 ஏலம்
ஐபிஎல் 2021 சீசனுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வழக்கம்போல ஏப்ரல், மே மாதங்களில் இந்த தொடர் துவங்கி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான ஏலம் கடந்த மாதத்தில் நடந்து முடிந்துள்ளது. 8 ஐபிஎல் அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து தங்களை தயார் படுத்தியுள்ளன.
அறிவிக்காத பிசிசிஐ
இந்நிலையில் ஐபிஎல் 2021 தொடர் இந்தியாவிலேயே நடைபெறுமா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ இன்னும் எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளதால், பயிற்சிகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இன்னமும் கொரோனா தாக்கம் உள்ளநிலையில் கடந்த ஆண்டை போல யூஏஇயில் நடத்தப்படுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
11ம் தேதி முதல் பயிற்சி
ஆயினும் இதுகுறித்தெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் சிஎஸ்கே கடந்த ஆண்டை போலவே முன்னதாகவே தங்களது பயிற்சிகளை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது. வரும் 11ம் தேதி முதல் சென்னையில் அந்த அணியின் பயிற்சிகள் துவங்க உள்ளது. இதில் கேப்டன் எம்எஸ் தோனியும் பங்கேற்கவுள்ளார்.
ஐபிஎல் 2021 குறித்து ஆலோசனை
இந்நிலையில் ஐபிஎல் நிர்வாக குழு கூட்டம் விரைவில் கூடி இந்த சீசன் எங்கு மற்றும் எந்த தேதிகளில் நடைபெறும் என்பது குறித்து விவாதிக்க உள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தொடர் எவ்வாறு திட்டமிடப்பட உள்ளது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.