கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக ஐபிஎல் 2021 தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர் தள்ளி மட்டுமே வைக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் பிசிசிஐ சார்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் டி20 உலக கோப்பைக்கு முன்னதாக ஐபிஎல்லை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ஐபிஎல்லுக்கு திட்டம்
தற்போது செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பைக்கு முன்னதாக ஐபிஎல்லை நடத்தி முடிக்க தற்போது திட்டமிட்டு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆனால் தற்போது அதுகுறித்து அவசரம் எதுவும் இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பலதரப்பில் பாதிப்பு
ஐபிஎல் 2021 தொடர் மீண்டும் நடத்தப்படாவிட்டால் பிசிசிஐ மட்டுமின்றி ஸ்டார், ஐபிஎல் அணிகள், பங்குதாரர்கள் உள்ளிட்டோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். பிசிசிஐக்கு ஸ்டார் ஒவ்வொரு போட்டியின் அடிப்படையில் நிதியளித்து வருவதாகவும் ஒரு பாட்டிக்கு 54.4 கோடி ரூபாய் அளிப்பதாகவும் அவர் கூறினார்.
31 போட்டிகளுக்கு நிதி
இந்நிலையில் இதுவரை 1,577 கோடி ரூபாய்களை 29 போட்டிகளுக்காக பிசிசிஐ பெற்றுள்ளதாகவும் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படாவிட்டால் மீதமுள்ள 31 போட்டிகளுக்காக 1,700 கோடி ரூபாயை பிசிசிஐ பெறமுடியாமல் போய்விடும் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார். இதேபோல ஸ்டார் தன்னுடைய விளம்பரதாரர்களிடம் இருந்து பணத்தை பெறமுடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும்
இதேபோல டைட்டில் ஸ்பான்சர் விவோ இன்னும் 225 கோடி ரூபாயை கொடுக்கவில்லை என்றும் அதிகாரப்பூர்வ பார்ட்னர்கள் டாட்டா, அன்அகாடமி, டிரீம் 11 உள்ளிட்டவை இணைந்து 300 கோடி ரூபாய் அளிக்கவில்லை என்றும் சவுரவ் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து நடத்தாவிட்டால் பிசிசிஐக்கு 2,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.