ஐசிசி பட்டியல் வெளியீடு
ஒரு நாள் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி அதிக ரன்களை அதாவது 8,227 ரன்களை குவித்த வீரர்கள் என்ற பெருமையை சவுரவ் கங்குலியும் சச்சின் டெண்டுல்கரும் பெற்றுள்ளதையும் ஒருநாள் போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிகபட்சமாக 176 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் இவர்கள் குவித்துள்ளதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் விவரங்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.
ஐசிசி டிவிட்டரில் பாராட்டு
ஒருநாள் போட்டிகளில் சராசரியாக இவர்கள் இருவரும் இணைந்து 47.55ஐ பெற்றுள்ளனர். இதை வெளியிட்டுள்ள ஐசிசி, இதுவரை ஒருநாள் போட்டிகளில் 6,000 ரன்களை கூட வேறு எந்த வீரர்களும் பார்ட்னர்ஷிப்பில் அடித்ததில்லை என்றும் ஐசிசி கேப்ஷன் வெளியிட்டுள்ளது. மேலும் கங்குலி மற்றும் சச்சின் சேர்ந்துள்ள புகைப்படத்தையும் ஐசிசி வெளியிட்டுள்ளது.
கங்குலியிடம் சச்சின் கேள்வி
இந்நிலையில், தற்போதுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான எளிமையான விதிகள் தங்களது காலத்தில் இருந்திருந்தால் தாங்கள் எவ்வளவு ரன்களை அடித்திருப்போம் என்று சவுரவ் கங்குலியிடம் சச்சின் தனது டிவிட்டர் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். ஐசிசியின் இந்த பதிவு மலரும் நினைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் சச்சின் டெண்டுல்கர் மேலும் தெரிவித்துள்ளார்.
4000 ரன்களை அடித்திருக்கலாம்
சச்சினின் இந்த கேள்விக்கு உடனடியாக பதில் அளித்துள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, 4000 அல்லது அதற்கு மேலும் அடித்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டு புதிய பந்துகளில் ஆடுவது என்பது முதல் ஓவரில் கவர் டிரைவ் பவுண்டரிக்கு செல்வது போன்றது என்றும் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.