3 சர்வதேச டி20 போட்டிகள்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 3 சர்வதேச டி20 மற்றும் 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியடைந்த நிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி அடைந்துள்ளது.
கேப்டன் கீரன் பொல்லார்டு மகிழ்ச்சி
அணியில் சில மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றுள்ள நிலையில், கரீபியன் பிரீமியர் லீக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சில இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுகுறித்து முன்னதாக கேப்டன் கீரன் பொல்லார்டு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
மேற்கிந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டம்
ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றி கொண்டது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய வீரர்கள் குறிப்பாக இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சிக்சர்களை விளாசிய சிவம் தூபே
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. போட்டியில் விளையாடிய இந்திய வீரர் சிவம் தூபே 3 சிக்சர்களை விளாசினார். பொல்லார்டு, வால்ஷி ஹேடன், கெஸ்ரிக் வில்லியம்ஸ் உள்ளிட்ட மேற்கிந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி 170 ரன்களில் சுருண்டது.
18வது ஓவரில் போட்டி நிறைவு
இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள், சிறப்பான பேட்டிங் மூலம் 18வது ஓவரிலேயே ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்தனர். லெண்டி சிம்மன்ஸ் 67 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடினார். இதன்மூலம் தொடரை 1க்கு 1 என மேற்கிந்திய தீவுகள் அணி சமன் செய்துள்ளது.
இளம் வீரர்கள் குழுவால் மகிழ்ச்சி
வெற்றியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் கீரன் பொல்லார்டு, இளம் வீரர்களை கொண்ட அணியால் தான் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
"இளம் வீரர்களுக்கு அனுபவத்தை பகிர்கிறேன்"
கிரிக்கெட்டை தான் மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடி வருவதாக தெரிவித்த பொல்லார்டு, தன்னுடைய அனுபவத்தை இளம் வீரர்களுக்கு கொண்டு செல்வதை சிறப்பாக செய்வதாகவும் கூறினார்.
கீரன் பொல்லார்டு பெருமிதம்
இளம் வீரர்களுக்கு கேப்டனாக இருப்பது தனக்கு மிகுந்த பெருமையை அளிப்பதாக தெரிவித்த பொல்லார்டு, ஆனால் அதிகமாக போடப்படும் நோ-பால், வைட் போன்றவற்றை குறைத்துக் கொள்வது முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மும்பையில் நடைபெறவுள்ள 3வது போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.