3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்
இங்கிலாந்தில் வரும் ஜூலை மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது. முன்னதாக ஜூன் மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த இந்த தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
காலி மைதானங்களில் நடத்த திட்டம்
வரும் ஜூலை 8, 16 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஹாம்ப்ஷயரின் ஏஜியாஸ் பவுல் மற்றும் லான்காஷயரின் ஓல்ட் டிரபோல்ட் ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் பாதுகாப்பான முறையில் நடத்தப்படும் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் பௌலர்
இந்நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக தான் ஆவலுடன் காத்திருப்பதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் பௌலர் கெமர் ரோச் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு பின்பு இந்த வாரத்தில் மீண்டும் தன்னுடைய பயிற்சியை துவக்கியுள்ள ரோச், இங்கிலாந்திற்கு செல்வது சில மலரும் நினைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். நல்ல வசதிகள், சிறப்பான சூழல் இருப்பதால் இங்கிலாந்தில் விளையாடுவது எப்போதுமே தனக்கு பிடித்தமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறப்பாக அமையும் என கருத்து
கடந்த ஆண்டில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி, தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த தொடர் மிகவும் சிறப்பாக அமைந்ததாக தெரிவித்துள்ள ரோச், தற்போது ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் விளையாடினாலும், அதுவும் சிறப்பாகவே அமையும் என்று தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
அணியின் இலக்கு தொடர் வெற்றி
இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள கெமர் ரோச், 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் சராசரி, 26.59. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தன்னுடைய 200 விக்கெட்டுகளை முழுமையாக நிறைவு செய்வேன் என்று ரோச் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுவே தனது இலக்கு என்று தெரிவித்துள்ள ரோச், அணியின் இலக்கு தொடரை வெல்வது என்றும் கூறியுள்ளார்.