இஸ்லாமாபாத்:15 ஆண்டுகளுக்கு பிறகு... வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி முதன் முறையாக பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட உள்ளது.
2004ம் ஆண்டில் இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு பின்னர் பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடைப்பெறவில்லை.
எந்த நாடுகளும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட விரும்பவில்லை. பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் போட்டி நடத்த பல்வேறு முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் அதற்கு எவ்வித பலனும் இல்லாமல் போனது.
இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி வரும் 30ம் தேதி பாகிஸ்தான் செல்கிறது. கராச்சியில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அந்த அணி விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி ஜனவரி 31-ந்தேதியும், 2-வது டி20 போட்டி, பிப்ரவரி 1-ந்தேதியும் நடைபெறுகிறது. 3-வது மற்றும் கடைசி போட்டி பிப்ரவரி 3-ந்தேதியும் நடக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முதன்மை செயல் அதிகாரி சுப்ஹான் அகமது , வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும், அதன் நிர்வாகத்துக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியில் பெண்கள் கலந்து கொள்வதன் வழியாக, பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. இதன் மூலம் பல புதிய, திறமையான விளையாட்டு வீராங்கனைகள் கிடைப்பார்கள் என்றும் கூறினார்.